Thursday, September 1, 2011

விழுப்புரம் மாவட்டக் கோயில்கள்

விழுப்புரம் மாவட்டக் கோயில்கள்-1

அன்னியூர்
விழுப்புரத்திலிருந்து வடமேற்காக செஞ்சியை நோக்கிச் செல்லும் சாலையில் 18 கிமீ பயணம் செய்து அன்னியூரை அடைகிறோம். ""அன்னையூர்'' என்பதுதான் அன்னியூர் ஆனது என்றும் ; வன்னிமரத்தைத் தலமரமாகக் கொண்டு வன்னியூர் என அழைக்கப்பட்டு பின்னர் அன்னியூராக மருவியது என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
மரத்தின் பின்னே நின்றவாறு மறைந்திருந்து வாலியை வதம் செய்த பாவம் தீருவதற்காக ராமபிரான்,இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டதால், ராமநாதீசுவரர் என்ற திருநாமங்கொண்டுள்ளார், இத்தலத்து ஈசன்.
ராமாயணத்தை நினைவுகூறும் வகையில், இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் பெயர்களும் அமைந்திருப்பது,தலபுராணத்திற்கு வலுவூட்டுகின்றன.

அன்னை நான்கு கரங்களுடன் திரிபுரசுந்தரி என்ற திருநாமங்கொண்டு நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறாள். தனது இடது காலை தரையில் வைத்தபடி,வலது காலை காகத்தின்மீது வைத்தபடி அமர்ந்து அபூர்வமாக காட்சி தரும் சனீசுவரர் திருவுருவம், அன்னியூர் தலத்தின் தனிச்சிறப்பாகும். அருகிலேயே நீளாதேவி, பூதேவி சமேதராக சேவை சாதிக்கும் வரதராஜப் பெருமாள் ஆலயமும் உள்ளது.

* பனைமலை
காஞ்சி கயிலாயநாதர் கோயிலைக் கட்டிய மாமன்னன்தான் இந்தக் கோயிலையும் கட்டியிருக்க வேண்டும் என்று, தொலைவிலிருந்தே நமது கருத்தை தெரிவித்துவிடலாம். அதுதான் பனமலை தாளகிரீசுவரர் திருக்கோயில்.
விழுப்புரம்-செஞ்சி சாலையில், விழுப்புரத்திற்கு வடமேற்கில் 22 கி.மீ. தொலைவில் உள்ள அனந்தபுரத்தையடுத்து உள்ளது பனமலை. பச்சைப் பசேலென்று கண்ணைக் கவரும் வயல்களுக்கு நடுவே, நீண்ட மலை ஒன்று நம் கண் எதிரில் தெரிகிறது. பாறைமேல், ஒரு பூண்டு கூட முளைத்திடவில்லை. உச்சியிலே ஒரு கோயில் கம்பீரமாகத் தெரிகிறது.
சதுரமான கருவறையில் தாளகிரீசுவரர் அருள் பாலிக்கிறார். பனைமரத்தை தலமரமாகக் கொண்ட ஆலயங்கள் வரிசையில் பனமலையும் இடம் பெறுகிறது. ""தாள்'' என்பது பனையைக் குறிக்கும். அதனால்தான் ""தாளகிரீசுவரர்'' என்று திருநாமங்கொண்டுள்ளார். இடதுபுறம் அஸ்ததாளாம்பிகை தனிச் சன்னதி கொண்டுள்ளாள். காஞ்சி கயிலாயநாதர் ஆலயம் போலவே காட்சி தருகிறது. மூன்று தள மூலவர் விமானம். கருவறை விமானத்தைச் சுற்றிலும் சிங்கத் தூண்களிடையே, சிவபராக்ரம சிற்பங்கள். கருவறையின் உள்ளே, காஞ்சியைப் போலவே சோமாஸ்கந்தர் திருவுருவம் புரைக்கற்களால் ஆனது. மூலவர் தாளகிரீசுவரரின் இருபுறமும் அயன்கலைமகள், அரி-திருமகள் சிற்பங்களைக் காணமுடிகிறது.

மலைப்பாதையிலேயே குகை ஒன்றில், சிம்மவாகினியாக அஷ்டதசபுஜ துர்க்கை ஒன்றும் உள்ளது.

வேப்பமரம் ஒன்றையும் அருகில் காண்கிறோம். பலநூறு ஆண்டுகளாயினும், பழமை மாறாமல் பொலிவு நீங்காமல், கம்பீரமாகக் காட்சித் தருகிறது பனமலை தாளகிரீசுவரர் திருக்கோயில். பனமலையைச் சுற்றிலும் உள்ள ஏழு ஊர்மக்கள், சித்திரை மாதத்தில் பெருவிழாக் கொண்டாடுகிறார்கள். சுவாமி ஏழு
ஊர்களுக்குத் திருவுலா செல்வது தனிச்சிறப்பு. பனமலைக்கு 3 கிமீ தொலைவில் மருதீசுவரர் அருள்பாலிக்கும் சங்கீதமங்கலம் குறிப்பிடத்தக்கது

*பிரம்மதேசம்
பனமலைக்கு கிழக்கே உள்ளது பிரம்மதேசம். செஞ்சிபுதூர் செல்லும் சாலையில் சென்று காணவேண்டிய, மிகப்பழமையான சிற்பக் கருவூலம் இந்தத் திருத்தலம். சந்தடியற்று, ஒதுங்கி நிற்கும் ஊரின் நடுவே, உள்ளூர் மக்கள் இதன் அருமையை அறியாதிருக்க, மத்திய அரசின் தொல்லியல்துறை, இதன் பழமையை அறிந்துணர்ந்து, பழமை அழியாதிருக்கும் வகையில் திருப்பணியைச் செய்து வருகிறது. வழிபாட்டுக்கு வருமா என்பதை பிரம்மபுரீசுவரர் தான் உறுதி செய்ய வேண்டிய நிலை.

வேதம் ஓதும் அந்தணர்களின் குடியிருப்பை உருவாக்கி, ஆலயமும் எழுப்பி, அந்த நாட்களில்,அந்த ஊர்களை பிரம்மதேசம், சதுர்வேதிமங்கலம் என்று அழைத்தனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இப்படி ""பிரம்மதேசங்கள்'' உள்ளதைக் காணலாம்.

இரண்டு கோயில்கள்

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தில் பாதாலீசுவரர்,பிரம்மபுரீசுவரர் என்று இரு ஆலயங்கள் உள்ளன.
பிரம்மபுரீசுவரர் ஆலயம் ஊருக்கு வடமேற்கில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுர வடிவிலான கருவறையில், வட்டவடிவமான ஆவுடையாரின் மேல், பிரம்மபுரீசுவரர், சிவலிங்கத்திருமேனி நம்மைக் கவருகிறது.
பூதவரிசையிலேயே பஞ்சத்தந்திரக் கதைகளும், சிவபுராணச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

* எசாலம்
பிரம்மதேசத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது எசாலம். அடித்தளம் முதல், கருவறை விமானம், உச்சியில் கலசம் வரை கல்லினாலேயே அமையப்பெற்ற திருக்கோயில்.ராமநாத ஈஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருவையாறைச் சுற்றிலும் அமைந்துள்ள ""சப்தஸ்தான'' திருத்தலங்களைப் போலவே, முழுவதும் கற்றளி, கம்பீரமாக அமைந்துள்ளது. அன்னை, ""திரிபுரசுந்தரி'' என்ற திருநாமங்கொண்டுள்ளாள். பிரம்மதேசமும் எசாலமும், மிக அருகில் அமைந்துள்ள, முற்றிலும் பழமையான திருக்கோயில்கள்.

திருவண்ணாமலை மாவட்டக் கோயில்கள்

திருவண்ணாமலை

தமிழ்நாட்டின் பெரிய திருக்கோயில்களில் தனித்தன்மை கொண்டது திருஅண்ணாமலையார் திருக்கோயில். கிரிவலம் சுற்றும் பாதையையும் சேர்த்து ஏழு திருச்சுற்றுகளும், ஒன்பது ராஜகோபுரங்களும் கொண்டு, ஜோதி வடிவமாக ஈசன் தோன்றியதை சுட்டிக் காட்டும் மலையின் அடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்தாகும். தெற்கு,வடக்கு,மேற்கு வாசல்களில் இரண்டிரண்டு கோபுரங்களும், கிழக்கு திசையில் மூன்று கோபுரங்களுமாக ஒன்பது ராஜகோபுரங்களும், திருத்தலத்தை நெருங்கும்போதே நம் கண்களைக் கவரும்.

பதினொரு நிலை ராஜகோபுரம்: 217 அடி உடையதாக 11 நிலைகளைக் கொண்டு 11 கலசங்களுடன் கம்பீரமாக் காட்சி தருவது மிக உயரமான கீழைக்கோபுரம் ஆகும். தெற்கு கோபுரத்தை திருமஞ்சனக் கோபுரம் என்றும்; மேற்கு கோபுரத்தை பேய் கோபுரம் என்றும்; வடக்கு கோபுரத்தை அம்மணி கோபுரம் என்றும் கூறுவர்.

கம்பத்து இளையனார் : பொதுவாக திருக்கோயில்களில் நாம் நுழைந்ததும் முதலில் விநாயகர் சந்நிதியே தென்படும். ஆனால், அண்ணாமலையில் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர், முருகப் பெருமான். 16 கால் மண்டபத்தில், அருணகிரிநாதரின் பிரார்த்தனையை ஏற்று, பிரபுடதேவராய மன்னருக்கு ஒரு தூணில் காட்சி தந்தவர் இவர். அதனால்தான் அவர் கம்பத்து இளையனார் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த சந்ததியின் தென்புறம் உள்ளது சிவகங்கைத் தீர்த்தம். குளத்தின் வடமேற்கில் சர்வசித்தி விநாயர் உள்ளார்.முதலில் முருகப்பெருமானை வணங்கிய பின்னரே பக்தர்கள் உள்ளே செல்வர். வலதுபுறம் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது.

பாதாள லிங்கமும் ரமணரும் : இங்குதான் பாதாளலிங்கேசுவரர் சந்நதி உள்ளது. ""பாதாளம்'' என்பதற்கேற்ப, படிகள் வழியே கீழே இறங்கி அவரை தரிசனம் செய்கிறோம். பள்ளிப்படிப்பைத் துறந்து, பலத் தலங்களைச் சுற்றி வந்த பின்னர், வெங்கடசுப்ரமணியன் என்ற அந்தச் சிறுவனுக்கு பாதாளலிங்கேசுவரரின் தரிசனம் ஞானஒளியைத்தந்தது. அதன் பின்னர், ரமணர் ஆகி, ரமண மகரிஷி என்ற பெருமையும் பெற்று, திருஅண்ணாமலை திருத்தலத்தில் பல காலம் தங்கி தவம் செய்து முக்தியும் பெற்றது வரலாறு. அடுத்து நாம் காண்பதுதான் வல்லாளமகாராஜா கோபுரம். இந்த கோபுரத்தின் மீதேறிதான் தனது ஊனுடலை நீக்கிக் கொள்ள அருணிரிநாதர் முயற்சித்தார். கீழே விழுகையில்,அவரைத் தாங்கி நின்று காப்பாற்றி அருள்பாலித்த முருகப்பெருமான்,கோபுரவாசலில் காட்சி தருவதும் மிகப் பொருத்தமே !

அருந்தமிழ் பாடிய அருணகிரி: விஜயநகரப் பேரரசர்களில் இரண்டாவது தேவராயர் காலத்தில் வாழ்ந்தவர் அருணகிரியார். வாக்கிற்கு அருணகிரி, கருணைக்கு அருணகிரி என்று போற்றப்படுவர். ""அருணகிரி அப்பா! உன்னைப் போல் மெய்யாக ஒரு சொல் விளம்பினர் யார்?'' என்று தாயுமானவரால் புகழப்பெற்றவர். நல்ல செல்வாக்கு மிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்து, சைவ சமய இலக்கியத்திலும், இசையிலும் பெரும்புலமை பெற்றிருந்தார் அருணகிரி. விதி யாரை விட்டது ? அவரது வாழ்வில் திருப்பம் ஒன்று நேரிட, அதுவே அவரைத் திசைமாற்றி, பரத்தையரிடம் மயங்கி, பொருள் இழந்து அடிமையுற்று, வறுமையில் வாடிடும் நிலையை உருவாக்கியது. இத்தனையும் நேராதிருந்தால் ""இனிய திருப்புகழ் அமிர்தம்'' தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்குமா ? பெரியவர் ஒருவர் அருணகிரியார் நிலைகண்டு வருந்தி, முருகனைப் பணிந்து உய்யுமாறு அறிவுரை கூறினார்.

கோபுரத்திலிருந்து கீழே விழ ! : அதையும் ஏற்க மறுத்தது அருணகிரியார் சித்தம். வாழ்க்கை மீதே வெறுப்பேறிட, மோன நிலையை மேற்கொண்டார். அப்படியும் அவருக்கு நிம்மதி ஏற்படவில்லை. தனது உயிரையே மாய்த்துக்கொள்ள, திருஅண்ணாமலை கோயில் கோபுரத்தின் மீதேறி, அங்கிருந்து கீழே விழுந்திட எத்தனித்தபோது அந்தப் பேரதிசயம் நிகழ்ந்தது. ""தனது அடியார் உயிர் துறக்கக்கூடாது.'' என எண்ணினான் வேல்முருகன். கீழேவிழுந்து மாய்ந்திட முயற்சித்த அருணகிரியாரைத் தாங்கிப் பிடித்தததோடு, தனது வேலினால் அவரது நாவினில் ஆறெழுத்தையும் பொறித்து, முத்தமிழையும் ஊட்டினார். ""அருணகிரிநாதர்'' என்ற பெயரையும் தந்து, தனது நடனக் கோலத்தையும் காட்டியருளினார். ""எம் புகழ் பாடிடு அருணகிரி !'' என்று பணித்து, ""முத்தைத்தரு பத்தித்திருநகை'' என்று முதல் அடியையும் எடுத்துக்கொடுத்தார். அருணகிரி பாடியதோ 16 ஆயிரம் பாடல்கள். நாம் செய்த பாக்கியம், நமக்கு ஆயிரத்து முந்நூற்று அறுபது பாடல்களே கிடைத்துள்ளன.

கருணைக்கு அருணகிரி: தன்னுடன் வாதம் செய்ய வந்து தோற்கும் புலவர்களின் காதுகளை அறுத்து வந்தவர் வில்லிபுத்தூரார். அவர் அருணகிரி நாதரையும் வாதில் வென்றிட எண்ணி, தேவராயரின் அனுமதியோடு அருணகிரிநாதரை வாதுக்கு அழைத்தார். மன்னனே நடுவராக அமர சம்மதித்ததோடு, தோற்பவர், வென்றவர் மனப்படி நடந்திட வேண்டுமென கட்டளையிட்டான்.
ஆதியும் அந்தமும் இல்லாத ஆண்டவன் மீதான அந்தாதி பாட முற்பட்டார் அருணகிரிநாதர். ""திதக்கத் தத்தி தத்திதி தாதை தாத துத்தித் தத்திதா'' என்ற செய்யுளுக்கு விளக்கம் கூறுமாறு வில்லிபுத்தூராரை கேட்க, உரை கூற முடியாது மயங்கி, தனது காதை காட்டினார் தோற்றவர். இனி ""புலவர்களின் காதுகளை அறுப்பதை நிறுத்திக் கொள்க !'' என அருணகிரிநாதர் கூறியதால் ""கருணைக்கு அருணகிரி'' என்ற பெயரும், புகழும் பெற்றார்.


சம்பந்தாண்டானுடன் வாதம் அருணகிரிநாதரின் புகழ்கண்டு சகிக்காத சம்பாந்தாண்டான் என்ற தேவி உபாசகன், தேவாராயனை அணுகினான். தாம் உபாசிக்கும் கடவுளை அரசவைக்கு யார் அழைத்து வருவாரோ அவரையே அரசன் ஆதரிக்க வேண்டுமென கோரினான்.




திருவண்ணாமலை மாவட்டக் கோயில்கள்-1

காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருஉலா வரும் நாம் இதுவரை பல தலங்களை தரிசித்துள்ளோம். ஆனால், இந்த மாவட்டத்தில், சேயாற்றின் கரையிலுள்ள ஈரேழு பதினான்கு தலங்களை தரிசிக்காமல் நமது பயணம் முழுமை பெறாது. எனவே, தொண்டைமண்டலத்தின் பல்குன்றக் கோட்டத்தின் ஒரு பகுதியான போளூர் - செங்கம் நோக்கி விரைகிறோம்.
தமிழ்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அதிக தூரம் வடக்கு, வடமேற்காக உத்திரவாகினியாகச் செல்லும் சிறப்பைப் பெற்றுள்ளதே தற்போது செய்யாறு என்று அழைக்கப்படும் சேயாறு. மகரவாகினியான கங்கைநதிக்கு நிகராக புனிதமானது சேயாறு என்று அருணாசல புராணம் கூறுகிறது.
"கங்கை நிகராம் சேயாற்றில்
காலைச் சந்திக் கடன்கழித்து
மங்கை கனகச் சிவிகையின் மேல்
மறைஓ லம்இட வழி கொண்டாள்' என்கிறது அந்தச் செய்யுள்.
அன்னை பராசக்தி சேயாற்றில் புனித நீராடியதால், அது கங்கை நதிக்கு சமமான பெருமையைக் கொண்டுவிட்டதாம்.
சேயாறு உருவான கதை
அண்ணாமலையாரின் இடதுபாகம் இடம்பெற வேண்டும் என்று காஞ்சியில் அவதரித்த காமாட்சியம்மை தவம் மேற்கொண்டாள். கம்பை ஆற்றைவிட்டு விட்டு, அண்ணாமலையை நோக்கித் தனது பயணத்தைத் துவக்கினாள். வாழைப்பந்தல் என்று தற்போது அழைக்கப்படும் இடத்தை அடைந்த அன்னை, கமண்டல நதி சங்கமிக்கும் இடத்தில், மண்ணினால் சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி வழிபடத் துவங்கினாள்.
பூஜைக்குப் புனிதநீர் வேண்டுமே! அதற்கு எங்கே போவது! என்றெண்ணி மைந்தன் முருகனை அழைத்தாள். அன்னையின் பூஜைக்குப் புனிதநீர் வேண்டி, முருகப்பெருமான், உமாமகேசுவரர்களை நினைத்து, ஜவ்வாது மாமலையை நோக்கி, தனது வேலை வீசினார். அதன் குறி செங்கண் நோக்கிச் சென்று பாய்ந்தது.
மலையைத் துளைத்தது வீரவேல்!
முருகப்பெருமான் வீசிய வீரவேலும் விரைந்து சென்று, செல்லும் வழியில் இருந்த ஏழு குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையைத் துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்திச் சொருகிக் கொண்டது. அந்த இடமே மேல்குப்பம் என்று இன்று அழைக்கப்படும் சிற்றூர் ஆகும்.
மலையைத் துளைத்த வேல், புனிதநீரைப் பெருக்கெடுத்திடச் செய்து, நீர்வீழ்ச்சியாக ஓடச் செய்தது. தெய்வத் திருமகன் உருவாக்கிய அந்த ஆறுதான் சேயாறு. தென் கயிலாயமான பர்வதமலையையொட்டிப் பெருகி வடக்கு, வடகிழக்கு நோக்கிப் பாய்ந்து, காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாலாற்றுடன் சங்கமித்து, சதுரங்கப்பட்டினத்தில் கடலோடு சேருகிறது.
பிரம்ம குமாரர்கள் ஏழுபேர்!
முருகப்பெருமான் அறிந்திருக்கவில்லை, அந்த மலையடிவாரத்தில், பாவவிமோசனம் வேண்டி ஏழு அந்தண குமாரர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர் என்று! அனந்தமாபுரத்தைச் சேர்ந்த அந்த எழுவர், முறையே போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன், வாமன் என்பவராவர். முருகப்பெருமானின் வீரவேல், மலையைத் துளைத்துச் சென்றபோது, இவ்வேழு அந்தண குமாரர்களின் சிரங்களையும் கொய்து எறிந்துவிட்டது. சேய் உருவாக்கிய ஆறு, "செங்குருதியாறு' ஆகியது.
வீரவேலினால் அந்தணகுமாரர்களுக்கு முக்தியும், பாவ விமோசனமும் கிட்டியது. ஆனால் முருகப்பெருமானை பிரம்மஹத்திதோஷம் பற்றிக் கொண்டது. காமாட்சியம்மை, ஆற்றுநீர் செங்குருதியாகப் பாய்வதைக் கண்ணுற்று திடுக்கிட்டாள். ஞான திருஷ்டியால் நிகழ்வுகளை அறிந்தாள்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, உடனே சேயாற்றின் கரையிலேயே ஏழு சிவலிங்கத் திருமேனிகளை அமைத்து, பூஜித்திடுமாறு முருகப் பெருமானுக்கு உணர்த்தினாள் அன்னை.
எழுந்தன ஏழு ஆலயங்கள்
அப்படி முருகப்பெருமான் சேயாற்றின் கரையில் வழிபட்ட திருத்தலங்கள் இன்று "சப்த கரைகண்டம்' என்றழைக்கப்படுகின்றன. காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகியவையே அவை.
காரி உண்டவர் கறை கண்டவராக!
ஆலகால விஷத்தை உண்ட எம்பெருமான் "நீலகண்டன்' என்று திருநாமங் கொண்டார். "காரி' என்ற சொல் கருமையைக் குறிப்பதாகும். கருமையானது, நீலநிற நஞ்சையும் குறிக்கும். நீலகண்டனையே "காரி உண்டிக் கடவுள்' என்று பழங்காலத்தில் வழிபட்டுள்ளனர். சங்க காலத்தில் பெருவள்ளலாக விளங்கிய சிற்றரசன் நன்னன்வேண்மான். இவனது மலைநாட்டை "ஏழிற்குன்றம்' என்று அழைத்தனர். இவன் ஆண்ட பல்குன்றக் கோட்டத்தில், மலையொன்றின் மீது "காரியுண்டிக் கடவுள்' எனும் சிவாலயமும் இருந்ததாம். "பத்துப்பாட்டில்' இதுபற்றி குறிப்பு உள்ளது.
"காரி' உண்ட கடவுளே பிற்காலத்தில் காரி கண்ட ஈசுவரனாகி காரகண்டம், கரைகண்டம் என்று மருவி கரைகண்டேசுவராகி, ஏழு திருத்தலங்களும் "சப்த கரைகண்டம்' என்றே அழைக்கப்படுகின்றன. "காரி' என்ற பெயர் நிலவியதை உறுதிப்படுத்திட, அருகிலே காரியாறு என்ற சிற்றாறு ஓடுகிறது. காரியந்தல், காரிப்பட்டு, காரிமங்கலம் என்று பெயர் கொண்ட சிற்றூர்களும் அதன் தொடர்டை உறுதிப்படுத்துகின்றன.
தனயனைப் பணிந்து சேயாறு உருவானபோது, ஏழு அந்தணகுமாரர்கள் பலியான தோஷம், தாயை மட்டும் விட்டுவிடுமா? முருகப் பெருமானை ஏவிய செயல், அன்னையைச் சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது.
ஏழுகைலாயங்கள்
எனவே, அந்ததோஷம் நீங்கிட, காமாட்சியம்மை, சேயாற்றின் தென்கரையில் ஏழு சிவாலயங்களை உருவாக்கினாள். அவை சப்தகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை முறையே மண்டைகளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி ஆகும். ஆக நாம் தரிசிக்கவிருப்பது ஈரேழு சிவாலயங்கள் ஆகும். அத்துடன் வாழைப்பந்தல், பர்வதமலை, கலசபாக்கம் ஆகியவையும் சேரும்.


காஞ்சி
"காஞ்சி' என்று அழைக்கப்படும் திருத்தலமே நாம் தரிசிக்கும் முதல் தலம் ஆகும். போளூரிலிருந்து 26 கி.மீ. செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது. சப்த கரை கண்டேசுவரர் திருத்தலங்களில் முதலிடம் பெறுவது காஞ்சி. 10ம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசால் விரிவாக்கம் பெற்று, நாயக்க மன்னர்களாலும், நகரத்தார்களாலும் பல முறை திருப்பணிகள் செய்விக்கப்பட்ட நகரம்.
பிரதான நுழைவாயில், சேயாற்றின் அருகில் தெற்குதிசை நோக்கியபடி உள்ளது. பலிபீடம், கொடிமரம், நந்திதேவர், ஸ்தபன மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகிய அத்தனை அமைப்புகளும் ஆகம விதிகளுக்கேற்ப அமைந்துள்ளன. தலமரம் வில்வம்.
உள்சுற்றில், சப்தகரைகண்டேசுவரர்களின் சிவலிங்கத் திருமேனிகளும் இடம் பெற்றிருப்பதால், எழுவரையும் இங்கேயே முதலில் தரிசித்திட முடிகிறது. அறுபத்து மூவர், சப்தமாதர், காசிவிசுவநாதர், பைரவர் சந்நதிகள் இடம் பெற்றுள்ளன.
மூலவர் கம்பீரமான சிவலிங்கத்திருமேனி, பலநூறு ஆண்டுகள் பழமையானது. அண்மையில் "குடமுழுக்கு' கண்டவர் கரை கண்ட ஈசுவரர். வாழ்க்கையின் எல்லையைக் காணாதவர் கரைகண்ட ஈசனால் ஆட்கொள்ளப்படுவர்! தேவ கோஷ்டங்களில் பரிவார தேவதைகளோடு லட்சுமி நாராயணப் பெருமாளும் இடம் பெற்றுள்ளார்.
கரைகண்டேசுவரர் சந்நதிக்கு வடக்கில், துவார சக்திகளுடன் கூடிய பெரிய நாயகி சந்நதி. அங்குசம், பாசம், மேற்கரங்களிலும், முன்கரங்கள் அபய வரதக் கோலத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் அன்னை.
உட்பிரகாரத்தில் கிருஷ்ணன் சிற்பம் ஒன்றும் உள்ளது.வடகிழக்கில் பழநி ஆண்டவர் சந்நதி உள்ளது.
வைகுண்டவாசலும், ஜீவரகர மூர்த்தியும் தனிச்சிறப்பு ஆகும். பங்குனி மாதத்தில் சேயாற்றின் வடகரையில் தீர்த்தவாரி நடைபெறுவது காஞ்சியின் சிறப்பு ஆகும்.
அண்ணாமலை பெரிய கோயிலில் நடைபெறும் அத்தனை திருவிழாக்களும் "காஞ்சி' கரைகண்டேசுவரர் கோயிலிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


கடலாடி
அன்னையின் ஆணையை ஏற்று, முருகப்பெருமான் மலைமீது வேலை வீசிய இடம்தான் கடலாடி. போளூரிலிருந்து 25 கி.மீ. சேயாற்றின் வடகரையில் அமைந்த தலம். இங்குள்ள வன்னீசுவரரை வணங்கியபின் தான் வேலை குறிவைத்தாராம் வேலவன். சப்தகரைகண்டத் தலங்களில் இரண்டாவது இது.
இங்குள்ள அண்ணாமலையார் பாதத்தை வணங்கிய பின்னரே பக்தர்கள் "பர்வதமலை' ஏறத்துவங்குவர். "கடவுளின் பாதம் பட்ட மலையடியே கடவுளடியாகி' இன்று கடலாடி என்று மருவியுள்ளது என்றும் கூறுவர். 10ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கம்பண்ண உடையார் கல்வெட்டுகள் உள்ளன.
பெரிய வளாகத்தில், தெற்கு நோக்கிய நுழைவாயிலுடன் கூடிய கோயில். மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் இரண்டு சிவலிங்கங்களும் உள்ளன. மூன்று தள விமானம், கருவறைக்கு மேலே அழகூட்டுகிறது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை அம்மன் கோஷ்டங்களிலும்; சண்டிகேசுவரர் கோமுகத்திற்கு எதிரேயும் இடம் பெற்றுள்ளனர்.
கிழக்கு நோக்கிய சந்நதியில் அன்னை பெரியநாயகி அருள்பாலிக்கிறாள். நின்ற திருக்கோலம்.
பருவதமலை ஏறுவோர் கடலாடியில் தான் தங்கள் பயணத்தை துவங்குவர். 15 நாட்கள் விரதமிருந்து, காவியுடுத்தி கடலாடி கரைகண்டேசுவரர், பெரியநாயகி அம்மனை தரிசித்த பின்னரே மலை எறத் துவங்குவர்.
கடலாடியில் நாம் மேலும் காண வேண்டியது வன்னீசுவரர் திருக்கோயிலும், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலும் ஆகும். சித்திரை மாதத்தில் கடலாடிப் பெருமான், சேயாற்றின் கரையில் எழுந்தருளி, "தீர்த்தவாரி' வழங்குவார்.


மாம்பாக்கம்
சப்த கரைகண்டேசுவரர் திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் மாம்பாக்கம் ஆகும். போளூரிலிருந்து 19 கி.மீ. சேயாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கும் போதெல்லாம் பெரிதும் பாதிக்கப்படுவது மாம்பாக்கம்தான். வடகிழக்காய் சேயாறு திரும்பும்போது, கலசபாக்கம் வரை வேகம் குறைகிறது. ஆனால், மாம்பாக்கம் அடிக்கடி வெள்ளத்தின் பாதிப்புக்குள்ளாவதால், மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து, திருக்கோயிலும் கவனிப்பாரற்று கிடக்கும் நிலை.
ஏகநாயகராக தனியே காத்திருக்கிறார் கரைகண்டேசுவரர், திருப்பணி செய்வோரை எதிர்நோக்கியபடி! ஈசனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று என்று எண்ணினாலும், பழமையும், புராணமும் கொண்ட தலம் இது.
மாவிலைகள் ஒதுங்கிய திருத்தலமே மாம்பாக்கம்
திருமால் தேவருலகிலிருந்து ஒரு அமுத கலசத்தைக் கொண்டு வந்து, அதனையே சிவலிங்கத் திருமேனியாக பாவித்து பூஜை செய்தாராம்.
அப்போது அந்தக் கலசம் நிலைப்பெற்ற இடமே கலசப்பாக்கம் என்றும்; கலசத்தில் அணிவித்த நூல் தங்கிய இடம் பூண்டி எனவும்; கலசத்தில் வைத்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் மாம்பாக்கம் என்றும்; கலசத்தின் மீது வைக்கப்படும் கூர்ச்சம் என்ற தருப்பைப்புல் தங்கிய ஊரே பில்லூர் எனவும் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
10ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மூன்றாவது கரைகண்டேசுவரர் திருக்கோயில் நிலை குலைந்து நிற்பது கண்டு ஏக்கப்பெருமூச்சுடன் பயணத்தை நாம் தொடர்வோம்!

திருவண்ணாமலை மாவட்டக் கோயில்கள்-2

தென்மகாதேவ மங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை, பர்வதமலை

திருஅண்ணாமலை கிரிவலம் 17 கி.மீ.தான். ஆனால் அதே மாவட்டத்தில் சேயாற்றின் கரையையொட்டி பர்வதமலை கிரிவலம் 32 கி.மீ.கொண்டது.
மாதிமங்கலத்து கரைகண்டேசுவரர், மார்கழி மாதத்தில் பர்வதமலையை வலம் வந்து, தீர்த்தவாரி கொள்வதோடு; ஆங்காங்கே உள்ள ஊர்களில் மண்டகப்படி பெற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து பர்வதமலைக்கு வடக்கில் அமைந்துள்ள வெள்ளந்தாங்கீசுவரர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கே மிருகண்ட நதியில் தீர்த்தவாரி கொண்டுவிட்டுப் பின் மகாதேவ மங்கலத்திற்குத் திரும்பி வருகிறார்.
காசிக்குச சென்றுவந்தவர்களைப் பார்த்தாலே புண்ணியம் என்பார்கள். எல்லோராலும் பர்வதமலையின் உச்சிக்குச் சென்று இறைவனை தரிசிப்பது இயலாது; கிரிவலம் செல்வது என்பதும் சந்தேகத்துக்குரியதுதான். எனவே, கிரிவலம் வந்துவிட்ட கரைகண்டேசுவரரை தென்மகாதேவ மங்கலத்தில் தரிசித்து அந்தப் புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாமே !

தென் மகாதேவ மங்கலம் : மாதிமங்கலம் என்று அழைக்கப்படும் தென்மகாதேவ மங்கலம். போளூருக்கும், செங்கம்நகருக்கும் நடுவே உள்ளது. போளூரிலிருந்து 16 கி.மீ. இவர்தான் மத்திய கரைகண்டேசுவரர். விஜயநகரமன்னர்கள், சம்புவராயர், சோழமன்னர்கள் மற்றும் பல குறுநில மன்னர்களால் திருப்பணி செய்விக்கப்பட்ட திருக்கோயில். பர்வதமலைக்குச் செல்வோர், மாதிமங்கலத்து மகாதேவரை தரிசித்துவிட்டுத்தான் புனித யாத்திரை மேற்கொள்வர்.
கிராமத் தீர்ப்பாயம், தேர்த்திருவிழா என்றெல்லாம் பெருமை பெற்ற பகுதி இது. தேர்த்திருவிழாவின்போது, தேர்க்காலில் அடிபட்டு மரணமுற்ற ஒருவனுக்கு "தேரடிவீரன்' என்று நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ள பெருமை உண்டு.

பெரியகோயில் : ராஜகோபுரம் இல்லாவிடிலும், இரண்டு சுற்றுக்களைக் கொண்ட பெரிய கோயில் தென் மகாதேவ மங்கலத்தில் உள்ளது. அதுதான் கரைகண்டேசுவரர் திருக்கோயில். கரைகண்டேசுவரர் முன்னே உள்ள நந்தியெம்பெருமானின் கொம்புகள் வழியே வடக்கே நோக்கினால், பர்வதமலை உச்சியில் உள்ள மல்லிகார்ஜுனேசுவரர் திருக்கோயில் தெரியும்.
பிரதான நுழைவாயிலில், பஞ்சமூர்த்திகளின் கதைச்சிற்பங்கள் கொண்ட நுழைவாசல் மண்டபம். அதன்முன்னே நந்திமண்டபம் திருஅண்ணாமலை திருக்கோயிலை நினைவூட்டுகிறது. வெளிச்சுவற்றில் திருக்குளம் அமைந்துள்ளது.
முகமண்டபம், ஸ்தபன மண்டபம், துவார பாலகர்களை கடந்து செல்கிறோம். ஏழு திருத்தலங்களின் மையமாக அமைந்துள்ள இத்தலத்து"மகாதேவர்' சற்று வித்தியாசமானவர்தான். கம்பீரமாகக் காட்சி தருகிறார். கருவறையின் வெளிச்சுவற்றில் வடக்கே "வைகுண்டவாசல்' உள்ளது. சைவ- வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக இப்பகுதியில் பல திருக்கோயில்களில் "வைகுண்டவாசல்' உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் வழியே வெளியே வந்து பெரிய நாயகி சன்னதியை அடைகிறோம்.
வெளிச்சுற்றில், இன்னும் நாம் தரிசிக்க வேண்டிய மூன்று கரைகண்டேசுவரர்களையும் லிங்கவடிவில் காணலாம். வள்ளி தேவயானையுடன் முருகப்பெருமான், காலபைரவர், நவகிரக சன்னதிகள் அமைந்துள்ளன.
தென் மகாதேவ மங்கலத்தின் சிறப்பினைப் பறைசாற்றும் ஒன்பது கல்வெட்டுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றியெல்லாம் இத்தலத்து இறைவன் "ஸ்ரீகரைகண்டேசுவரம் உடைய நாயனார், ஸ்ரீகரைகண்டேசுவர நாயனார், ஸ்ரீகரைகண்ட கடவுள்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே "காரியுண்ட ஈசுவரன்' கரைகண்டேசுவரராக மாறியது பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னமேயே என்று அறியமுடிகிறது. நாமும் அவரை கரைகண்டேசுவரராக வணங்கி, வெளியே வருகிறோம்.

சதுர்வேத நாராயணர் : மாதமங்கலத்தில் நாம காணவேண்டிய மற்றோர் ஆலயம், ராதா, ருக்மணி சமேத சதுர்வேத நாராயணப் பெருமாள் திருக்கோயில் ஆகும். எல்லாவிடங்களிலும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ள திருமால், நான்குமறையோனாக, ராதா-ருக்மிணியுடன் சேவை சாதிக்கிறார். மகாதேவமங்கலத்திற்கு மேற்கில்தான் மல்லிகார்ஜுன சுவாமி அருள்பாலிக்கம் பர்வதமலை உள்ளது. சற்று கடினமான பயணமாகத்தான் இருக்குமாம் !

எலத்தூர் : சப்த கரைகண்டேசுவரர் திருத்தலங்களில் நாம் அடுத்து தரிசிக்கப்போவது எலத்தூர் ஆகும். போளூரிலிருந்து 13 கி.மீ. சேயாற்றின் வடகரையில் உள்ள ஐந்தாவது திருத்தலம் இது. சோழ மன்னர்கள் காலத்தில் உருவாகி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் உருவாகி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் விரிவடைந்த வரலாறு கொண்ட திருக்கோயில். "பிரதாப தேவராயபுரம்' என்றும் இத்திருத்தலம் அழைக்கப்பட்டதாம். விஜயநகர மன்னர்கள் காலத்தில் கன்னடமொழி பேசும் அந்தணர்கள் பலர் இங்கு குடியேறியதாக வரலாறு கூறுகிறது.
தெற்கு நோக்கிய நுழைவாயிலின் வழியே உள்ளே சென்று, 4 கால் மண்டபத்தில் கனகசபையை தரிசித்தவாறு, மூலவரைக் காண விழைகிறோம். அமைதியான சூழலில், சிறிய பாணமாக கரைகண்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். வடக்கே தனிச் சன்னதி கொண்டு நின்ற கோலத்தில் பெரிய நாயகி அம்மன் அருள்பாலிக்கிறாள்.
மூலவர் கருவறையைச் சுற்றிலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், நான்முகன், துர்க்கை, சண்டிகேசுவரர் சன்னதிகள். தனியாக விமானத்துடன் கூடிய சன்னதியில், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருளமான் எழுந்தருளியுள்ளார்.
வேதம் ஓதுவோர், நாதஸ்வரம் வாசிப்போர், திருவுலா வரும்போது பல்லக்கு சுமப்போர், தீவட்டி தூக்குவோர், முடிமழிப்போர், துணி வெளுப்போர் என திருக்கோயில் பணியாளர்களுக்கு நிலமானியம் வழங்கப்பட்டிருந்த வரலாறும் எலத்தூருக்கு உண்டு. இன்று...?

வில்வாரணி நட்சத்திரக் கோயில் : எலத்தூர் கரைகண்டேசுவரர் கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் முருகப்பெருமான் அருகிலேயே சிறு குன்றின் மீது குடிகொண்டுள்ளார். அந்த மலையே, "நட்சத்திரக் கோயில் ' என்ற சிறப்புப் பெயரை பெற்றுவிட்டது. "வில்வராய நல்லூர்'ண என்று அழைக்கப்பட்டது.
முருகப்பெருமானின் பெருமையில் கரைகண்டேசுவரருக்கும், பெரிய நாயகிக்கும் பங்கு உண்டு. கந்தசஷ்டி திருநாளில் ஐந்தாம் நாள் "சக்திவேலை' அன்னையிடம் பெறுவதற்காக, வில்வாரணி முருகப்பெருமான் எலத்தூர் திருக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார். அதேபோல, சித்திரை மாதத்தில் "ஆற்று உற்சவ ஊறல்' திருவிழாவிலும், அம்மையப்பரை பூசை செய்திட முருகப்பெருமான் ஏலத்தூருக்கு எழுந்தருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பங்குனி மாதத்தில் "பிரம்மோற்சவம்' நடைபெறும் போது, திருமணம் நடந்து முடிந்ததும், பாலிகையை நதியில் விடுவதற்காக முருகப்பெருமான் சேயாற்றுக்கு எழுந்தருளுகிறார்.

எழில் குன்றின் மீது அழகன் குமரன் : சப்த கரைகண்டேசுவரர்களையும் வழிபட்ட குமரன், தனக்கென தனிக்கோயில் கொண்டுள்ள இடமே வில்வாரணி நட்சத்திரக்கோயில். 12ம் நூற்றாண்டில் உருவாகியுள்ளது. இப்போது நாம் காணும் எழில் குமரன் கோயில் சோழமன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில்.
குன்றின் மீது வாசம் செய்யும் குமரன் "சிவ சுப்ரமணிய சுவாமியாக' எழுந்தருளியுள்ளார். நாகம் குடைபிடிக்க, சிவலிங்க ரூபியாகக் காட்சி தந்ததால் சிவ சுப்பிரமணியசுவாமி என்று திருநாமம் கொண்டுள்ளார்.
மேற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடிய அழகிய கோயில். அடிவாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், நவகிரக சன்னதிகள் குன்றின் மீது அமைந்த கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அருவத்திருமேனியின் பின்புறம் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியின் சிலைகள் நிறுவப்பட்டு, பூஜிக்கப்படுகின்றன. சேயாற்றில் இரண்டு முறை தீர்த்தவாரி கொள்ளும் சிறப்பைப் பெற்றவர் சிவசுப்பிரமணியசுவாமி.

பூண்டி : பூண்டி, சேயாற்றின் வடகரையில் உள்ள ஆறாவது "கரை கண்டேசுவரர்' திருத்தலம். போளூருக்குத் தெற்கே 9 கி.மீ. தொலைவில் உள்ள கலசப்பாக்கத்திலிருந்து ஒரு கி.மீ.தூரம். கலசத்தின் நூல் ஒதுங்கிய தலம்.
இரண்டு மதிற்சுவர்களை உடைய பெரிய கோயிலாக இருந்தது. ராஜகோபுரம் இல்லை. "அதிகார நந்தி' பெரிய வடிவில் காணப்படுவதால், சோழர் காலத்துத் திருப்பணி எனக் கருதப்படுகிறது. "நரி பூசித்த தலம்' என்பர். அதற்கு சான்றுரைக்க, கோயிலுக்கு வரும் பாதையில் இருபுறமும், இரண்டு கல்நரி சிலை உள்ளன. இரண்டு சிவனடியார்கள், அகத்தியரின் கோபத்திற்கு ஆளாகி, நரி வடிவம் பெற்றபின், கரைகண்டேசுவரரின் அருளால் விமோசனம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.
மகாமண்டபம், பிரதோஷ நந்தி, அர்த்தமண்டபம் ஆகியவற்றைத் தாண்டி, கருவறை முன் செல்கிறோம். பதினாறு பட்டைகள் கொண்ட பாணத்துடன் "÷ஷாடச லிங்கத்' திருமேனியராக கரை கண்டேசுவரர் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய சன்னதி. உள் சுற்றில் பெரிய நாயகி அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். சித்தி புத்தி விநாயகர், ராதா - ருக்மிணியுடன் வேணு கோபாலசுவாமியும், நடராஜர் சபையில் "ஆடவல்லான் சன்னதி' யும் தனிச் சிறப்பு பெற்றவை.
கரைகண்டேசுவரர் கோயிலுக்குத் தென்கிழக்கில் அகத்தியர் ஆலயமும், சற்று மேற்கில் அரசு கொண்டப்பெருமாள் திருக்கோயிலும் உள்ளன. அண்மைக் காலம் வரை இங்கு வாழ்ந்து வந்த "பூண்டி மகான்' என்றழைக்கப்படும் சுவாமிகளின் மடமும் உள்ளது.

குருவிமலை : காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் மாந்தோப்பில் அமைந்து, குரு மூலை என்று அழைக்கப்பட்ட திருத்தலமே தற்போது "குருவிமலை' ஆகியுள்ளது. போளூருக்குத் தெற்கே 3 கி.மீ. சேயாற்றின் வடகரையில் அமைந்த ஏழாவது கரைகண்டேசுவரர் திருத்தலம் இது.
10-ம் நூற்றாண்டில் சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில். முழுவதும் உருக்குலைந்துவிட்ட ஆலயத்தில் நல்ல முறையில் திருப்பணி செய்த அன்பர்கள் பாராட்டுக்குரியவர்களே. மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கடந்து, கருவறையில் கரைகண்டேசுவரரை தரிசிக்கிறோம்.
மூலவருக்கு இடதுபுறம் தெற்கு நோக்கியபடி பெரியநாயகி எழுந்தருளியுள்ளாள். சிவசுப்பிரமணியசாமி, திருவிழாவின்போது இந்தத் திருத்தலத்திற்கும் எழுந்தருளுவார்.

பர்வதமலை : பூண்டியில் வாழ்ந்துவந்த மகானின் அருளாசியுடன் பர்வத மலைக்கு புனிதப் பயணம் சென்று வந்தோர் எண்ணற்றவர். பன்னிரண்டு சித்தபுருஷர்கள், பர்வதமலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமியையும், பிரமராம்பிகை அம்மனையும் இரவில் சென்று ஆராதனை செய்வதாக பூண்டி மகான் குறிப்பிடுவார். சதா ஒரு அழுக்கு மூட்டையுடன் திரிந்து வந்த அவர், இந்த மலைக்கு அடிக்கடி சென்று வருவாராம். அப்படி ஒரு பிணைப்பு !
ஏழு சடைப் பிரிவுகள் கொண்டதான பர்வதமலை, முன்பகுதி தென்மகாதேவ மங்கலத்திலும், பின்பகுதி கடலாடியிலும் இருப்பது போல் தோன்றுகிறது. "நன்னன் சேய் மன்னன்' என்பவனால் கட்டப்பட்ட கோயில் இங்கே உள்ளது. சில கோணங்களில் சிவபெருமானின் திரிசூலம் போலக் காட்சி தருவதால் பர்வதமலையை "திரிசூலகிரி' என்றும் அழைப்பர்.
கரடு முரடான பாறைகளைக் கடந்து செல்ல, ஆங்காங்கே இரும்புக் கடப்பாறைகளை ஊன்றி வைத்துள்ளனர். அவைகளைப் பிடித்துப் கொண்டே மேலே ஏறுவது சற்று கடினமாக காரியம்தான். ஒற்றையடிப்பாதையில் கோரைப்புற்கள். கருவேல முள் ஆகியவற்றை கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும்.
குமரி நெட்டு, செங்குத்தான ஏற்றம் கொண்ட கடப்பாறை நெட்டு, தண்டவாளப்படி, ஏணிப்படி என்று பற்பல குறிப்புகள் நம்மை பர்வதமலையின் உச்சிக்கு அழைத்துச் செல்கின்றன. கற்பகச்சுனை அருகே அண்ணாமலையாரின் இருபாதங்கள். அடுத்து கணக்கச்சி ஓடையருகில் கம்பிவேலியைப் பிடித்தபடியே மேலே செல்ல வேண்டும்.

மூன்று பிரிவுகளாக மலைக்கோயில் : மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது பர்வதமலை மல்லிகார்ஜுனேசுவரர் திருக்கோயில். முதல் பகுதியில் விநாயகர். ஆறு பெருமான் ; வீரபத்திரர், காளி, நந்தியெம்பெருமான் ; இரண்டாவது பகுதியில்தான் மல்லிகார்ஜுனேசுவரர், அமைதியான சூழலில் ஆனந்த ஈசுவரனாக அருள்பாலிக்கிறார். ஆண்டு முழுவதும் சென்று வழிப்படக்கூடிய மலையாக பர்வதமலை கருதப்படுகிறது.
மூன்றாவது பகுதியில்தான் அம்மன் சன்னதி. பிரமராம்பிகை என்று திருநாமம். இரண்டு கரங்களுடன் நின்ற கோலத்தில், மீனாட்சியம்மையைப் போன்ற அழகுத்திருமேனி. இருபுறமும் துவாரசக்திகள்.
ஏழு சடைப்பிரிவுகள் கொண்ட பர்வத மலைக்குச் செல்வோர் ஒரு இரவேனும் மலையில் தங்கிவிட்டுத்தான் கீழே இறங்க வேண்டுமாம். அப்படிச் செய்வோர் பிறவிப் பயன் எய்துவர் !
கடுமையான விதிமுறைகளைக் கொண்டது பர்வதமலைப் பயணம். மேலே செல்ல நான்கு மணி நேரம் ; கீழே இறங்கிட ஆறுமணி நேரத்திற்கு மேல் ஆகும் ! வசதி உள்ளவர், மெல்லச் சென்று, மெல்லத் திரும்பி வரலாம். நாம்தான் ஈரேழு சிவாலயப் பயணத்தை விரைவில் முடிக்க வேண்டும்!
போளூருக்கு மேற்கே எலத்தூருக்கு வடக்கில் சிறுவள்ளூர், கேட்டவரம் பாளையம், கண்டபாளையம் ஆகிய திருத்தலங்கள் முக்கியமானவை. நரசிம்மர் வழிபட்ட கேட்ட வரம்பாளையமும், வெள்ளந்தாங்கீசுவரர் அருள்பாலிக்கும் கண்டபாளையமும் தனிச் சிறப்பு பெற்றவை.



திருவண்ணாமலை மாவட்டக் கோயில்கள்-3

நார்த்தாம்பூண்டி தாமரைப்பாக்கம் வாசுதேவம்பட்டு செங்கம்


சேயாற்றின் இரு கரைகளிலும் அமைந்த சப்த கரை கண்டம், சப்த கயிலாயம், நட்சத்திரக் கோயில், பருவதமலை ஆகிய இடங்களை ஒரே மூச்சில் வலம் வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகும்.
தெள்ளு தமிழில் அமைந்த திருத்தலப் பெயர்கள், ஆயிரம் ஆண்டு வரலாற்றுச் சின்னங்கள், அழுத்தமான தல வரலாறுகள் அத்தனையும் மிகுந்த இந்த ஜவ்வாது மலைச்சாரலும்; முருகப்பெருமான் தனது தாயாரின் சிவபூஜைக்காக உருவாக்கிய சேயாறும் புனிதப் பயணத்தை மேலும் புனிதமாக்குகின்றன.
ஆங்காங்கு பல திருக்கோயில்கள் பராமரிப்பின்றிக் கிடப்பதும்; ஒரு சில தலங்களில் மட்டும் திருப்பணிகள் செய்விக்கப்பட்டு, பிற தலங்கள் ஒருகால பூசனைக்கும் ஏங்குவதுமான நிலை மாறவேண்டுமானால்; வெளியூர் அன்பர்கள் எவரேனும் வரமாட்டார்களா என்ற நிலைமை மாறி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் உள்ளூணர்வோடு, நாள்தோறும் பூசகர்கள் வழிபாடு நடத்திடும் நேரம் திருக்கோயிலுக்குச் சென்று தாமும் பூசனையில் பங்கேற்றால் மட்டுமே விடிவு பிறக்கும். அதுவரை, பழமையை பறைசாற்றும் நினைவுச்சின்னங்களாகவே பல திருக்கோயில்கள் நிற்கும்.
நாம், திருஅண்ணாமலை மாவட்டத்திருவுலாவின் இறுதிப்பகுதிக்கு வந்து விட்டோம். இனி இருப்பது சப்த கயிலாயத்தலங்கள் மூன்று மட்டுமே. புறப்படுவோமா?

நார்த்தம்பூண்டி
நாரதர் இலந்தை மரத்தினடியில் தவமிருந்து, ஈசனை வழிபட்ட திருத்தலம் தான் நார்த்தாம்பூண்டி. போளூர் - திருஅண்ணாமலை நெடுஞ்சாலையில் நாயுடுமங்கலம் கூட்டுரோட்டில் இறங்கி, மேற்கு நோக்கி 5 கி.மீ. பயணித்து இத்தலத்தை அடையலாம்.
தக்கன் தனது மூன்று மகன்களையும், சிவனை விரும்பாதவர்களாகவே வளர்த்தான். ஆனால் நாரத முனிவரோ, அம்மூவருக்கும் சிவதீட்சை செய்து வைத்து, நல்வழிப்படுத்திவிட்டார். சினங்கொண்ட தக்கன், நாரத முனிவருக்கே சாபம் தந்துவிட்டான். தக்கனின் சாபத்தால் உருக்குலையத் துவங்கிய நாரத முனிவர், சேயாற்றின் தென்கரையில் உள்ள இத்திருத்தலத்தில், இலந்தை மரத்தினடியில் பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்து எம்பெருமானின் தரிசனமும், சாபவிமோதனமும் பெற்றார். "நாரதபூண்டி'யாகத் திகழ்ந்த ஊர் மருவி, நார்த்தாம்பூண்டி ஆகிவிட்டது.
இத்தனை நாள் ராஜகோபுரம் இல்லாத குறை அன்பர் ஒருவரின் பெருமுயற்சியால் தீர்ந்து திருப்பணி செய்விக்கப்பட்டு குடமுழுக்கையும் கண்டுள்ளது நார்த்தாம்பூண்டி.

கொத்தளத்து விநாயகர்
திருமதிலையொட்டி வெளிப்புறம் மேற்கில் அமைந்துள்ளது கொத்தளத்து விநாயகர் சன்னதி. நார்த்தம்பூண்டி பகுதியை ஆண்டுவந்த மன்னன் ஒருவன். போருக்குச் செல்லும்போது, தனது கோட்டை, கொத்தளங்களைக் காத்திடுமாறு விநாயகரை வணங்கிடுவானாம்.
ஒருசமயம், ஈசன் தனது மைந்தன் ஆனைமுகனையே தளபதியாகக் கொண்ட யானைப்படையை அவனுக்குத் துணையாக அனுப்பி வெற்றி ஈட்டித் தந்ததால் கொத்தளத்து விநாயகருக்கு தனிச் சன்னதி எழுப்பி மகிழ்ந்தான்.
மகாமண்டபம், இருபத்தாறு கற்தூண்கள் தாங்கி நிற்கும் அழகிய மண்டபம். அதனையடுத்து ஆறுகால் மண்டபத்தில் "கனகசபை' அமைந்துள்ளது. அடுத்து அர்த்தமண்டபமும், மூலவர் கருவறையும் உள்ளன. நாரதருக்கு அருள்பாலித்த கைலாசநாதர், உயர்ந்த பாணமாக சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மகாமண்டபத்தின் உள்காற்றில் விநாயகர், நால்வர், சப்தமாதர், முருகன் சன்னதிகள் உள்ளன.
மூலவரின் வடக்கே, பெரிய நாயகி கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் நான்கு கரங்களோடு, அபய வரத முத்திரையோடு காட்சி தருகிறாள்.
கோஷ்ட தேவதைகள் அனைத்தும், சிறிய விமானங் கொண்ட சன்னதிகளில் எழுந்தருளியுள்ளதும் தனிச்சிறப்பு. திருஅண்ணாமலையைப் போல, இங்கும் வேணுகோபால சுவாமி எழுந்தருளியிருப்பதும், நார்த்தாம் பூண்டிக்குப் பெருமை சேர்ப்பதாகும். ஆறுமுகப்பெருமானும், வள்ளி-தெய்வானையுடன் சன்னதி கொண்டுள்ளார்.

நாரதர் தவமிருந்த இலந்தை மரம்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தழைத்து நிற்கும் இலந்தை மரமே இங்கு தலமரம் ஆகும். நாரத முனிவர் தவமிருக்க, தவம் செய்த விருட்சம் அல்லவா அது. சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதன் முன்னே நந்தியும், அருகில் கரங்கூப்பி அமர்ந்தபடி நாரத முனிவரையும் காண்கிறோம்.
75 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறையும், அதன் பிறகு 1987லும் குடமுழுக்கு கண்ட கைலாசநாதர், இப்போதும் மீண்டும் புத்தொளி பெற்று, குடமுழுக்கு காண்பது, நார்த்தம்பூண்டி மக்கள் பெறும் அரிய பாக்கியம். அந்த முயற்சியில் உருவானதே தற்போது நாம் காணும் ஐந்து முயற்சியில் உருவானதே தற்போது நாம் காணும் ஐந்து நிலை ராஜகோபுரமும், விமானங்களுக்கு வண்ணப் பூச்சும்!


தாமரைப்பாக்கம்
சேயாற்றின் தென்கரையில், போளூருக்குத் தென்மேற்கில் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆறாவது சப்த கைலாயத்தலம்தான் தாமரைப்பாக்கம். சேயாற்றின் வடகரையில் உள்ள மாம்பாக்கத்திற்கும் கடலாடிக்குமிடையே ஆற்றைக்கடந்து இந்த ஊரை அடையலாம். சிரம், பாதம் தேடியபோது, பருவதமலையின் அடிவாரத்தில், ஓர் அமிர்த கலசத்தை வைத்து, ஈசனை திருமால் வழிபட்டபோது, முருகப்பெருமான் உருவாக்கிய சேயாற்றின் வெள்ளம் அதனை அடித்துச் சென்றபோது, கலசத்தில் இருந்த தாமரை மலர் மட்டும் இங்கே தங்கி நின்றதால், தாமரைப்பாக்கம் எனப் பெயர் கொண்டது.
இதேபோல் மாவிலை ஒதுங்கிய மாம்பாக்கம், தர்ப்பை ஒதுங்கிய பில்லூர், பூணூல் ஒதுங்கிய பூண்டி, கலசம் நின்ற இடம் கலசப்பாக்கம் என்று பெயர்கள் ஏற்பட்டதை ஏற்கெனவே குறிப்பிட்டோம்.
"அக்னி' வடிவ ஜோதியாகத் தோன்றியவரே அக்னீசுவரர். தீப்பிழம்பாய்த் தோன்றிய எம்பெருமானுக்கு நாள்தோறும் இடைவிடாது தாராபாத்திரம் மூலமாக, புனிதநீர் சொட்டுச் சொட்டாக விழச் செய்து, அவர் உளங்குளிர வைக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட திருக்கோயில். குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
திருமால், மகாலட்சுமியுடன் கிழக்கு நோக்கியபடி எழுந்தருளியிருப்பதும், திருமால், அக்னீசுவரரை வணங்கி வழிபட்ட தலவரலாறுக்கு ஆதாரமாகிறது. வேத பாராயண மண்டபமும், அதனுள் துவாரபாலகர், நந்தி, பலிபீடமும் அமைந்துள்ளன. அதனையடுத்த ஆறுகால் மண்டபம்; அதைத் தொடர்ந்து கருவறை.
தேவகோஷ்டங்களில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, அண்ணாமலையார், நான்முகன், துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் நான்கு மூலைகளிலும் கருங்கல்லினாலான நந்திதேவர் சிலைகள் உள்ளன.
நின்றகோலத்தில் தனிச் சன்னதி கொண்டுள்ளாள் திரிபுரசுந்தரி அம்மன். ஏழுநாட்கள் தினம் ஒரு குடம் சேயாற்று நீர் கொண்டு அக்னீசுரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் அத்தனை துன்பமும் விலகிடுமாம்.



வாசுதேவம்பட்டு
போளூருக்குத் தென்மேற்கில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது, சப்த கைலாயத் தலங்களுள் ஏழாவது தலமான வாசுதேவம் பட்டு. சேயாற்றின் தென்கரையில் பக்தவத்சலராக, அடியாரை ஆட்கொண்ட எம்பிரான், ஆட்கொண்டீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள திருத்தலம் இது.
ராஜகோபுரம் இல்லை. ஓர் இடிந்த கோட்டையும், அதன் அருகில் வீர ஆஞ்சநேயர் கோயிலும் பழமையின் சின்னங்களாக உள்ளன. வாசுதேவ மகாராஜா என்ற மன்னனின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படுவது, அவரது காலத்தில் இத்திருத்தலத்தில் செய்வித்த திருப்பணிகள், வீரநாராயணப் பெருமாள் ஆலயத்தை உருவாக்கியது ஆகியவற்றின் காரணமாகத்தான்.

சித்திரகுப்தன் வணங்கியது
யமதர்மனின் கணக்கராக, மானுடர்களின் பாவ புண்ணியக் கணக்கெழுதும் சித்திரகுப்தனும், விசித்திரகுப்தனும் இத்தலத்தில் ஈசனை வழிபட்டனராம். ஈசானிய மூலையில் அவர்கள் இங்கே தனிச் சன்னதி கொண்டுள்ளது, தல வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளது.
தெற்கு நோக்கிய நுழைவாசல், பஞ்ச மூர்த்திகள் சுதை உருவங்கள் காட்சி தருகின்றன. அடுத்து 12 கால் மண்டபத்தில் சப்தமாதர் சன்னதி, விநாயகர், முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள் சுற்றில் இடம்பெற்றுள்ளனர். அடுத்து நான்கு கால் மண்டபத்தின் இருபுறமும் துவார பாலகர்கள், பிரதோஷ நந்தி. தென்புறம் ஆலமரச்செல்வர், நால்வர், காசிலிங்கம், பைரவர் சிலைகள்.
மூலவர் சுயம்புலிங்கமாக, அனைத்து அடியார்களையும் ஆட்கொண்டவராக அருள்பாலிக்கிறார். மாற்றுப் பாதையில் செல்வோரைத் தடுத்தாட் கொள்பவராயிற்றே!
மூலவர் சன்னதிக்கு வடக்கே, துவார சக்திகளுடன் கூடிய அன்னை சௌந்தரநாயகி சன்னதி. பாசம், அங்குசம் தாங்கியபடி நான்கு கரங்களுடன் நின்ற கோலம். அகிலத்தையே ஆட்கொண்டவரின் பாகம்பிரியாள், அகிலாண்டேசுவரி என்றும் அழைக்கப்படுகிறாள்.
ஈசானிய பாகத்தில் நவகிரக சன்னதியும், தலமரமும் உள்ளன.

வீரநாராயணப் பெருமாள்
சிவாலயத்திற்கு வடமேற்கில் அமைந்துள்ளது, வாசுதேவ மன்னர் உருவாக்கிய வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில். கனகவல்லித் தாயார் தனிச் சன்னதி கொண்டுள்ளார். இங்குள்ள ஆஞ்சநேயர் திருமேனி, பவ்ய ஆஞ்சநேயராக, கலை நுணுக்கங்களுடன் கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



செங்கம்
நவிரைமலைக்கு அருகில் அமைந்துள்ளதால், "நவிரை செங்கண்மா' என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் செங்கம், திருஅண்ணாமலைக்கு மேற்கில் 31 கி.மீ. தொலைவில் சேயாற்றின் கரையில் அமைந்துள்ளது. சங்ககாலம் தொட்டே புகழ்பெற்ற பழமையான ஊர். "நன்னன்சேய் நன்னன்' என்ற அரசன் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக சங்ககால நூல்கள் கூறுகின்றன.
திருநாவுக்கரசரின் ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் இடம்பெற்றுள்ள தேவார வைப்புத்தலம். "கண்ணை' என்றும் அழைக்கப்படுவது. "செங்கண்மா' என்பது சங்ககாலத்துப் பெயர். "தென்கண்ணை ஆட்கொண்ட நாயகன்' என்று கல்வெட்டுகளில் குறிப்பு உள்ளது.
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர் காறை கழிப்பாலையுங்
கயிலாய நாதனையே காணலாமே!
என்று திருத்தாண்டகம் குறிப்பிடுவது இந்தக் "கண்ணை' திருத்தலத்தையே!
சென்னை-மாமல்லபுரம் சாலையில் கோவளத்துக்கு அருகில் "செங்கண்மால்' என்ற தலம் ஒன்று உள்ளது. திருமால் வழிபட்டதால் செங்கண்மாலீசுவரர் என்ற திருநாமங்கொண்டு ஈசன் எழுந்தருளிய தலம். அதை நினைவுகூரத்தக்கது.
ஊருக்குள் சென்று, ராஜவீதியில் அமைந்துள்ள ஈசுவரன், பெருமாள் கோயில்களை தரிசிப்போம். ராஜகோபுரம் இல்லாத பழமையான கோயில். கிழக்கு நோக்கிய வாயில். முன்புறம் நந்தி மண்டபம், விமானத்துடன் கூடியது.
உள்ளே சென்றால், சாளரம் நந்தி எதிரில் உள்ளது. எனவே தென்புற மகாமண்டல வாசல்வழியே உள்ளே செல்லவேண்டும். திருச்சுற்றில் விநாயகர், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், அண்ணாமலையார் மற்றும் துர்க்கை சன்னதிகள் உள்ளன.
நந்தியெம்பெருமான் வழிபட்டதால் ரிஷபேசுவரர் என்று திருநாமங்கொண்டு எழுந்தருளியுள்ளார் எம்பெருமான். அம்பிகை, சுவாமியின் இடப்புறம் தனிச் சன்னதி கொண்டுள்ளார். கிழக்கு நோக்கிய சன்னதிகள்.
தொல்பொருள் ஆய்வில், பல்லவர் காலத்து நாணயங்களும், நடுகற்களும் கிடைத்துள்ளனவாம். பங்குனி உத்திரம், சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுமாம்.
சிவன் கோயிலை அடுத்துள்ள தெருவில் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். ருக்மணி சத்யபாமாவுடன் வேணுகோபால பார்த்தசாரதிப் பெருமாள் சேவை சாதிக்கிறார். ராஜகோபுரம் கொண்ட கோயில். சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள் சன்னதிகள் தனியே உள்ளன. பெரிய வெளிச்சுற்றுடன் கூடிய அழகிய கோயில்.
செங்கண்மா தலத்துடன் அண்ணாமலை மாவட்ட உலா முடிவுறுகிறது.



சிதைந்து கிடக்கும் சிவாலயம்!

தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களுள் ஒன்று, ரெ. குன்னத்தூர் மரகதவல்லி அம்பாள் சமேத வீரஜம்பீஸ்வரர் கோயில்.
கி.பி.1317 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட சிவாலயம், அப்போது இப்பகுதியில் ஆட்சிபுரிந்த மன்னரான வீர ஜம்பன் என்பவரின் பெயரால் வீரஜம்பீஸ்வரம் என்றழைக்கப்பட்டது. கிருஷ்ணதேவராயர், பராக்கிரம பாண்டியன் ஆகியோரது நிலக்கொடைகளையும், திருப்பணிகளையும் பெற்றுள்ளது. கிருஷ்ண தேவராயரின் சின்னமான காளையோடுக்கூடிய பிறைச் சின்னம், ஆலயத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சிறப்புகள்பல கொண்ட வீர ஜம்பீஸ்வரர் ஆலயம், காலத்தால் சீர்குலைக்கப்பட்டு, இன்று பாழ்நிலையில் உள்ளது பரிதாபமானது. சிதைந்துள்ள நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்ததும் நந்திதேவர் வீற்றிருக்கின்றார். மகாமண்டபம் மூடுதளத்தோடு உள்ளது. இதனுள் இடப்புறம் கணபதி காட்சி தருகிறார். கணபதியின் தனிச் சன்னதி முற்றிலும் சிதைந்துள்ளது. காலபைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரும் இம்மண்டபத்தில் உள்ளனர். அடுத்து, அர்த்த மண்டபம், கருவறை. கருவறையுள் கருணாமூர்த்தியாய் லிங்கத்திரு மேனியராக அருளாட்சி புரிகின்றார் வீரஜம்பீஸ்வரர். ஐயனைப் பணிந்து, ஆலயத்தை வலம் வருகையில் கோஷ்ட தெய்வங்களைக் காண்கிறோம். சுவாமி சன்னதியின் விமானம் மிகவும் பின்னமுற்று, செடிகள் முளைத்து, திருப்பணி வேண்டிக் காத்திருக்கின்றது. அடுத்து, மேற்கில் சண்முக தேவியர் இருவருடன் வீற்றருளும் தனிச் சன்னதி. அதியற்புத அழகில் மிளிறும் இவர், இடது காலை மடித்தும், வலது காலை நாகத்தின் தலைமீது வைத்தும் உள்ளார். பால் அபிஷேகத்தின்போது ஆறுமுகர் திருமேனியில் இருந்து வழியும் பால், பாம்பின் வாய் வழியே வருவது போலிருக்கிறது. இது, பாம்பு பாலை கக்குவதுபோல் வித்தியாசத் தோற்றத்தோடு காட்சியளிக்கின்றது. மிக நேர்த்தியுடன் கலாரசனையோடு வடிவமைக்கப்பட்ட மூர்த்தம். காணக்கண் கோடி வேண்டும். கருவறையில் வலப்புறத்தில் உள்ளது அம்பிகை சன்னதி. அம்பிகை இங்கு மரகத ஜொலிப்பில் அருள் புரிவதாலோ என்னவோ, மரகதாம்பிகை என்கிற திருநாமத்தோடு காட்சி தருகின்றாள். அம்பிகை விமானமும் சீர் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. சுற்று மதில்களும் சீர்குலைந்து, பார்ப்பவர் மனதை உலுக்குகின்றன.
நவகிரக சன்னதி பாழ்பட்டு சரிந்துவிட்ட காரணத்தால் ஈசான்ய திக்கில் நவகோள் நாயகர்களின் சன்னதி புதிதாக அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. வீர ஜம்பீஸ்வரருக்கு தொடர்ந்து ஐந்து திங்கட்கிழமைகள் நெய்தீபம் ஏற்றி, பாலபிஷேகம் செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்துவர நினைத்தவை நிறைவேறும் என்கிறார்கள்! ஆறுமுகப் பெருமானுக்கு தொடர்ந்து ஆறு வளர்பிறை சஷ்டியில் பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனையும் செய்து, ஏழாவது சஷ்டியன்று சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்ய... அனைத்து தடைகளும், தோஷங்களும் நீங்குவதோடு, எதிரி பயமும் விலகுகிறதாம். மரகதவல்லி அம்பாளுக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து பால் அபிஷேகம் செய்து, எலுமிச்சைபழ மாலை சாற்றி, லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணத் தடை நீங்குவதோடு, மாங்கல்ய பலமும் கூடுகிறதாம். அருமை, பெருமை பல கொண்ட இச்சிவாலயம் இன்று பரிதாபகரமான நிலையில் உள்ளது. அரன் அருளும் அன்பர்கள் அளிக்கும் பொருளும் இருந்தால் இத்தொன்மையான சிவாலயம் மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்பது நிச்சியம்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவில் ரெ.குன்னத்தூர் உள்ளது.

வேலூர் மாவட்டக் கோயில்கள்

வேலூர் மாவட்டக் கோயில்கள்-1

சோளிங்கர் வள்ளிமலை மேல்பாடி (750 அடி உயர மலைமீது உள்ளது கோயில்)


ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை - (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.

*சோளிகங்கர்: தொண்டைநாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டாவது தலமாகவும், 108 திவ்விய தேசங்களில் 95-வதாகவும் விளங்குகிறது. சோளிங்கர் திவ்வியத் தலம், திருமங்கை யாழ்வாரும் பேயாழ்வாரும் மங்களாசாஸனம் அருளியுள்ள தலம். இராமனுஜர், தமது வைணவக் கோட்பாடுகளைத் தழைக்க செய்ய, நியமித்த எழுபத்து நான்கு சிம்மானங்களில் சோளிகங்கர் திருத்தலமும் ஒன்றாகும். தொட்டாச்சாரியர் எனும் ஆசாரியர், இந்தத் திருத்தலத்தில் அவதரித்தவர். அவரது வம்சத்துவர்களே, இத் திருக்கோயில் வழிபாடுகளை வழிநடத்திச் செல்கின்றனர்.

* கடிகைக்கோட்டம்: சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் சோழநாடு 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அப்போது இப்பகுதிக்கு கடிகைக்கோட்டம் என்ற பெயர் இருந்ததாம். சோழநாட்டைப் போலவே வளம் மிகுந்து காணப்பபடுவதால் சோழசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டது. நாளடைவில் அதுவே சோளிங்கபுரம் என்று மருவி, சோளிங்கர் என்றே தற்போது அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டைக்கு வடக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது. சோளிங்கர். சோளிங்கர் நகருக்கு இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கொண்டபாளையம் எனுமிடத்தில் 750 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது திருக்கோயில் 1305 படிகள் ஏறிச்சென்று, அங்கு சேவைசாதிக்கும் யோகநரசிம்மரின் அருளைப் பெற்றிடலாம். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுக்களும் கொண்டுள்ள அழகிய கோயில். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவத் திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே,கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் நமக்கு சேவை சாதிக்கிறார். சானக்ராம மாலை அணிந்த கோலம். உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லி, அமிர்தவல்லி எனம் தனது இருதேவியருடன் , அடிவாரத்திலிருந்து இரண்டு கி.மீ.தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார் அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சந்நதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம், ஆகியவை பக்தவச்சலர் கோயில் அருகில் உள்ளன.
மூலவர் யோக நரசிம்மசுவாமி சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களும் யோகசானத்தில் மடித்து
அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார். விசுவாமித்ரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிப்பட்டு பிம்மரிஷி பட்டமும் பெற்றிட்டார். பகத்ப் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தைத் தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரமுஞூ இத் திருத்திலத்தல் தவமிருந்தார். ராமனின் அவதார நோக்கம் நிறைவேறிய பின்னர். அவரோடு தானும் உடன் வருவதாகக் கூறிய ஆஞ்சநேயரும், இந்தத் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளும் தீராத தொல்லை கொடுத்து வந்தனர். காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள், அவர்களை சம்காரம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றில் துணையோடு, அவ்விரு அரக்கர்களையும் அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார். ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சகரதாரியாகவே,பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார். சின்னமலையில் அமர்ந்தபடியே, இங்கு என்னை சேவிக்க வரும் பக்தர்களின் குறைகளைப் போக்குவாயாக என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். பில்லி, சூனியம் ஆகியவற்றால் உள்ள பிரம்மதீர்த்த்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் சேவித்தால் நோய்கள் நீங்கப் பெறலாம். என்பது நம்பிக்கை. * தக்கான் குளத்தில் வரதராஜப்பெருமாள். தொட்டாசரியார், ஆண்டுதோறும், காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளை சேவித்துவருவதை வழக்கமாகக் கொண்டவர், மூப்பு காரணமாக அவரால் காஞ்சிபுரம் வரை பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது பெரிதும் வருந்தினார். அப்போது, ஒரு நாள், இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்தபடி, காஞ்சி வரதராஜப்பெருமாளையும், அவரது கருடசேவையையும் பற்றி சிந்தித்தபடி இருந்தார். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கருடவாகனத்தில், வரதராஜப்பெருமாள், சர்வாலங்கார பூஷிதராக, தக்கான் குளத்தின் கரையிலேயே தொட்டாச்சாரியாருக்கு காட்சி தந்தார். இன்றும்,காஞ்சிபரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், பெருமாள்,கருடராரூடராக சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக் குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஜதிகம், இங்கு தானதர்மம் நாளன்று இந்த மலையை கிரிவலம் வருவது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது. பெருமாள் மலையைத் தவிர,சோளிங்கர் நகரின் உட்பகுதியில் சோளபுரீசுவரர் திருக்கோயிலும் உள்ளது. 5 கல்வெட்டுகளைக் கொண்டே இந்த சிவாலயத் திருமேனி, சுயம்பு லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

* வள்ளிமலை: வள்ளிக்கிழங்கு தோண்டி எடுத்த இடத்தில் மகாலட்சுமியின் அவதாரமாக, மான் வயிற்றில் பிறந்தாள் வள்ளி. நம்பிராஜன் எனும் வேடுவர் தலைவன் அவளை, வள்ளிக்கிழங்குகளிடையே கண்டெடுத்து, வள்ளி என்ற பெயரும் சூட்டி அன்போடு வளர்த்தான். இதெல்லாம் நடைபெற்றது வள்ளிமலையில்தான். அன்று அருணகிரிதார் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தின் எல்லையில். ஆந்திர மண்ணைத் தொட்டவாறு அமைந்துள்ளது இந்தக் குன்று பெண்ணையாற்றின் கரையில் திருவலத்திற்கு வடக்கில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை. வனத்துறை, தொல்லியல் துறை ஆகிய மூன்று துறைகளின் ஆளுமைக்குட்பட்டது இந்த மலை மற்றும் கோயில், தாழக்கோயில் ஒன்றும், மலைக்கோயில் ஒன்றும் இங்கு உள்ளன. மலைக்கோயிலைச் சென்றடைய 444 படிகளைக் கடந்திட வேண்டும். குகைக்கோயில் அது. தாழக்கோயிலில், ஐந்து நிலை ராஜகோபுரம்,விநாயகர் சந்நதி முதலில் உள்ளது. கருவறையில் ஆறுமுகசுவாமி எழுந்தருளியுள்ளார். மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் சரவணப் பொய்கை உள்ளது. இதனருகில் தான் வள்ளி கோயில் உள்ளது. புடைப்புச் சிற்பமாக கவண்வீசும் கயிற்றை ஏந்தியபடி நின்ற கோலத்தில் ஆலோலம் பாடும் பாவனையில் வள்ளி காட்சி தருகிறாள். முருகப்பெருமானின் வேண்டுகோளுக்கிணங்க, வள்ளியை அச்சுறுத்திய யானையாக வந்த பிள்ளையார் அப்படியே மலை வடிவில் சமைந்து விட்டாராம். அக்குன்று இன்று கணேசகரி என்று அழைக்கப்படுகிறது. பிரார்த்தனை ஈடேற சிதறுகாய் உடைப்பது இங்கு மரபு ஆகி உள்ளது. கி.பி.816ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று இங்குள்ள சமணர் குகையில் உள்ளது. வர்த்தமானர்,பார்சுவநாதர், பத்மாவதி ஆகியோரது உருவங்களும் காணத்தக்கவை.


* மேல்பாடி: போர்க்காலத்தில் படைவீரர்கள் தங்கிய இடம்தான் மேல்பாடி பொன்னை ஆற்றின் மேல்கரையில் உள்ள தலம் இது. வாலாஜாப்பேட்டைக்கு வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ளது. முல்லை நிலத்தில் பல தலங்கள் “பாடி’ என்ற சொல்லை கொண்டு அமைந்துள்ளன. பாடி என்பது படைவீட்டைக் குறிக்கும். கந்தபுராணம் புகழ்ந்து பாடும் தலம் இது. அரிஞ்சிகை ஈசுவரம் என்று அழைக்கப்படும் ஒரு கோயிலும் சோமநாததேசுவர ஆலயம் ஒன்றும் இங்கே அமைந்துள்ளன. சோமநாதீவரர்,தபசுகிருதாம்பாள் கிழக்கு நோக்கிய சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். சப்தமாதர் சிலைகள், உள்சுற்றில் உள்ளன. சோமநாதீசுவரர், தபசுகிருதாம்பாள் கிழக்கு நோக்கிய சந்நதிகளில் எழுந்திருளியுள்ளனர். சப்தமாதர் சிலைகள் உள்சுற்றில் உள்ளன. “சோளந்திரசிங்க ஈசுவரமுடைய மகாதேவர் கோவில் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவது சோமநாதீசுவரைத்தான். * அருஞ்ஜயேசுவரம் மேல்பாடியில் கலைநயம் மிக்கதோர் ஆலயமாக நம் கவனத்தைக் கவருவது அருங்ஜேயேசுவரம் என்றழைக்கப்படும் கற்கோயில்தான் சோழீசுவரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ராஜாராஜ சோழனின் பாட்டனாகிய ஆற்றூர்க்குஞ்சிய அருஞ்ஜய சோழனின் நினைவாக அவனது பேரனால் கட்டப்பட்ட கோயில் இது. * நாக யக்ஞோபவீத கணபதி, பரம்பையே பூணூலாக்கி அணிந்துள்ள அற்புதவிநாயகரின் திருக்கோலம் ஒன்றை மேலப்பாடியில் காணமுடிகிறது. நாகயக்ஞோப வீத தாரணரான கணபதி அரிஞ்சிகை ஈஸ்வரத்தில் கோஷ்டத்தல் வீணாதார தட்சிணாமூர்த்தியை காணமுடிகிறது. கிரீவத்தின் நான்குபுறமும், கருங்கல்லினால் ஆன பெரிய நந்திகள் சப்தஸ்தானத்து ஏமூர் கோயில்களையும் எசாலம் ராமநாதீசுவரர் கோயிலையும் நினைவூட்டுகின்றன. ஒரு கால பூஜையாடு திருப்தி கொண்டுள்ளார் திரு அரிஞ்சிகை ஈச்சுரத்து மகாதேவர்.

* பொன்னை: மேல்பாடி வரை வந்த நாம் பொன்னையாற்றின் கரையில் சுயம்புலிங்க மாக எழுந்தருளியுள்ள மகாதேவரை தரிசிக்காமல் போக முடியுமா! மேல்பாடிக்கு வடக்கே 7 கி.மீ. பயணித்து பொன்னை என்ற தலத்தை அடையலாம். இதுவே தமிழகத்தின் எல்லையாகவும் அமைகிறது. அடுத்து, பெருஞ்காஞ்சியில் சந்திப்போம். அதுவும் வேலூர் மாவட்டக் கோயில்தான்!


வேலூர் மாவட்டக் கோயில்கள்-2




கயிலையில், உமையம்மையும், மகேசுவரனும் ஏகாந்தமாய் இருந்த வேளையில், நிகழ்ந்த திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையோ!
ஒரு சமயம், உமையவள் விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களையும், தனது கரங்களால் பொத்தினாள். அவ்வளவுதான்! உலகமே இருண்டு நிலை தடுமாறியது. பருவங்கள் மாறின! பசுவினங்கள் மிரண்டன! தேவர்களும் மாந்தர்களும் அஞ்சி பதைபதைத்தனர். ஒரு கணம் ஈசனின் பார்வையிலிருந்து விலகியதன் விளைவு இத்தனை விபரீதங்களா...!
அதற்குக் காரணமான அன்னையைப் பிரிந்திட முடிவு செய்தான் முக்கண்ணன். உமையம்மையின் தவறுக்கு பிராயச்சித்தமாக, பூவுலகம் சென்று தன்னை நோக்கி தவமிருக்குமாறு ஆணையிட்டான். ஆணையை அப்படியே சிரமேற்கொண்ட தேவி, பூவுலகம் நோக்கிப் புறப்பட்டாள். பாலாற்றங்கரையில், சப்தரிஷிகளும் ஆசிரமம் அமைத்து, தவமிருந்து வருவதைக் கண்டாள். அங்கே கௌதம மகரிஷியிடம் தீட்சை பெற்று, சிவபூஜை செய்யத் துவங்கினாள். செல்லுமிடமெல்லாம், ஓர் சிவலிங்கத்திருமேனியை ஸ்தாபித்துப் பூசனை செய்ய முற்பட்டாள். அவளது பயணம் நெடியது என்பதை அவள் அறியாதவள் அல்ல! அதனால்தான், கம்பா நதி தீரத்தை அடையும் வரை பொறுமை காத்து, கடந்து செல்லும் பாதையெல்லாம் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசனையும் செய்தாள். பாலாற்றின் வடகரையிலும் தென்கரையிலும், இப்படிப் பெருமைபெற்ற புண்ணியத் தலங்கள் பல, முக்தித் தலங்களாகவே அவை நம்மை பிரமிக்க வைக்கின்றன.
அப்படி பாலாற்றின் வடகரையில் அமைந்த தலம்தான் காவேரிப்பாக்கம். வேலூர் - சென்னை நெடுஞ்சாலையில் முக்கியமான சந்திப்பு இது. சோழ மன்னன் குலோத்துங்கன், பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆகியோரது ஆட்சிக்குட் பட்டிருந்ததை, கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
வேலூர் - சென்னை நான்கு வழி நெடுஞ்சாலைக்கு வடக்கே சற்று விலகியுள்ளது காவேரிபாக்கம். இங்கே, ஊருக்குள் நுழைந்ததும் நாம் காண்பது கொங்கணீசுவரர் திருக்கோயிலும், சுந்தர விநாயகர் திருக்கோயிலும்தான்.
முக்தீசுவரர் திருக்கோயில்தான் இங்கே பிரதானமான சிவாலயம். ஊருக்குள்ளே விசாரித்துச் செல்ல வேண்டும். அழகிய மூன்று நிலை ராஜகோபுரமும், அதன்மீது ஐந்து கலசங்களும், முகப்பில் "சிவசிவ' என்ற எழுத்துகளோடு சிவலிங்கத் திருமேனியும் ஒளிவிளக்காய் மிளிர்ந்திட, யாரோ புண்ணியம் தேடிக் கொண்டுள்ளனர்.
ஒரே ஒரு பிராகாரமும், 16 கால் கல்யாண மண்டபமும் கொண்டுள்ள அழகிய திருக்கோயில் இது. துவார விநாயகரும், முருகப் பெருமானும் இருபுறமும் கொலுவிருக்க, சுயம்புலிங்கத் திருமேனியாக முக்தீசுவரர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சன்னதி.
தெற்கு நோக்கிய சன்னதி கொண்டு, அலங்கார வல்லியாக அன்னை அருள்பாலிக்கிறாள். சோழர் காலத்துக் கட்டுமானம் கருவறையிலும், அதன் துவிதள விமானத்திலும் பளிச்சிடுகிறது.
ஊரின் மறுபகுதியில் அபய வரதராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. நீளாதேவி, ஸ்ரீதேவி சமேதராக சேவை சாதிக்கிறார் அபயவரதர்.

கொண்டாபுரம்
பார்வதி தேவி, சதாசிவத்தை சிந்தனையில் கொண்டு, கம்பா நதியை நோக்கி வரும் பாதையில், சிவத்தின் ஐந்து நிலைகளையும் ஒன்றாக்கி பஞ்சலிங்கேசுவரர் திருமேனியை நிறுவிய தலம், கொண்டாபுரம். கம்பா நதிக்கரையில் தவம் இயற்றுவதற்கு முன்பு இத்தலத்தில் எழுந்தருளி, தனது திருக்கரங்களால் பஞ்சலிங்கேசுவரரை எழுந்தருளச் செய்வித்ததால் பஞ்சலிங்ககேசுவரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. அருகிலேயே சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும் உள்ளது.
"கொண்டாபுரம்' காவேரிப் பாக்கத்திற்குட்பட்ட பகுதியேதான்.

ஒச்சேரி
காவேரிப்பாக்கத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஒச்சேரி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில் ஒன்று இங்கே உள்ளதை, எவரும் கண்டுகொள்ளாதிருப்பது வேதனைக்குரிய விஷயம்.
சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளதால் சுயம்புநாதர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படுகிறார். கருவறை விமானத்தைச் சுற்றி அஷ்டதிக் பாலர் சுதைச் சிற்பங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. கருவறையின் நான்கு முனைகளிலும், நந்திதேவருக்கு மட்டும் சுண்ணாம்பு பூசி தங்கள் கடமையை முடித்துக் கொண்டுவிட்டனர் பக்தர்கள்.
கிழக்கு நோக்கியபடி சுயம்புநாதர் எழுந்தருளியுள்ளார். அன்னை தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார். ஒரு கால பூஜைத் திட்டத்திற்குட்பட்ட கோயில் இது.
ஒச்சேரி, மிகவும் பழமை வாய்ந்த தலமாக இருந்ததை இங்குள்ள வரதராஜப் பெருமாள் திருமேனி எடுத்துக் காட்டுகிறது. அவருக்குரிய இடம், இடிபாடுகளுக்குள்ளாகி, கோதண்டராமசுவாமி திருக்கோயினுள்ளே குடியேறியுள்ளார் பெருமாள். ஊரில் பட்டாசாரியார் எவருமில்லாததால், சுயம்புநாதர் திருக்கோயிலில் கடமையாற்றும் சிவாச்சாரியாரே வரதராஜரையும் கவனித்துக் கொள்கிறார்.
வரதராஜரின் கம்பீரமான ஆறடி உயரத் திருமேனியின் அழகில் கூடவா எவரும் மயங்கவில்லை? அத்தனை அழகு! அவ்வப்போது திருமஞ்சனம் செய்வித்து, அலங்காரப் பிரியருக்கு, மாலையும் பீதாம்பரமும் அணிவித்துப் பார்க்கக் கோடிக் கண் போதாது!
இப்போதைக்கு சிவாச்சாரியார், அந்தப் புண்ணியத்தை தேடிக் கொண்டுள்ளார்.

கரிவேடு
ஒச்சேரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கரிவேடு. திரிபுவன வீரகண்ட கோபாலன் காலத்துக் கல்வெட்டு, இதன் வரலாற்றுச் சிறப்பைப் பறை சாற்றுகிறது.
திருமாலுக்கு அருள்புரிந்த எண்குணத்தீசன், இங்கு அரிபிரசாத ஈசுவரர் என்று திருநாமங் கொண்டுள்ளார். சுயம்புலிங்கத் திருமேனி.
அறம் வளர்த்த நாயகியாக தர்ம சம்வர்தனி என்ற பெயரோடு எழுந்தருளியுள்ளாள் அன்னை. பாலாற்றின் வட கரையில் அமைந்த அற்புதத் திருத்தலங்களுள் கரிவேடு தனிச் சிறப்பு கொண்டது.

வேகா மங்கலம்
கரிவேடுக்குத் தெற்கில் பாலாற்றையொட்டி அமைந்த மற்றொரு தலம் வேகாமங்கலம். உலகம் முழுதும் வெந்தழித்திட்ட நிலையில், வேகாது நின்றதால் இத்திருத்தலம் வேகாமங்கலம் எனப்பெயரோடு நிலைத்தது.
பரசுராமர் இறைவனை பூசித்ததால், பரசுராம ஈசுவரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். திருக்கோயிலின் உள்ளே கயிலாசநாதருக்கும் தனிச் சன்னதி உள்ளது.
காசிவிசுவநாதர் - விசாலாட்சி ஆலயம் ஒன்றும், பச்சையம்மன் திருக்கோயிலும், வேகாமங்கலத்தில் தரிசித்திட வேண்டிய பிற கோயில்கள்.

மாமண்டூர்
வேகா மங்கலத்திற்கு மிக அருகில் சந்திரமௌலீசுவரர் அருள்பாலிக்கும் மாமண்டூர் உள்ளது.

களத்தூர்
கரிவேடு களத்தூர் என்று, கரிவேடுடன் சேர்ந்து அழைக்கும் களத்தூர், நெடுஞ்சாலைக்குத் தெற்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பாலாற்றின் வடகரையில் உள்ள திருத்தலம் களத்தூர். கழனிகளிடையே நெளியும் பாதையில் சென்று, இங்குள்ள ஏகநாதர் திருக்கோயிலைச் சென்றடைய வேண்டும்.
விஜயநகர, சோழ, பல்லவ பாணிகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்தத் திருக்கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பராமரிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளது. நுழைவாயிலிலிருந்து, கருவறை வரையில், புற மண்டபம், முக மண்டபம், அந்தராளம் என்று அத்தனை அமைப்புகளையும் கொண்டது.
அரவின் படம் தலையை அணி செய்திட, கருவறையின் முன்னே உள்ள துவாரபாலகர், பல்லவர் காலத்துச் சிற்பங்கள். இருவரும் வெவ்வேறு அமைப்பைக் கொண்டவர்கள்.
"தத்தை' என்பது கிளியைக் குறிக்கும் சொல் ஆகும். மலையாள மொழியிலும் கிளியை "தத்தை' என்றே கூறுவர். வியாச முனிவரக்கு, கிருதாசி எனும் கந்தர்வப் பெண்ணிடம் கிளி உருவில் பிறந்தவரே சுகர். சுகப் பிரம்மம் என்று, பிற்காலத்தில் தனிச் சிறப்புப் பெற்றவர்.
சுகமுனிவர் பூசித்ததால் சுகநாதேசுவரர், தத்தேசுவரர் என்ற திருநாமம் கொண்டுள்ளார் ஈசுவரர். இந்த புராணத்தை விளக்கும் அழகிய புடைப்புச் சிற்பம் ஒன்று, கருவறையின் பின்னே மகரத் தோரணத்திறிகடையே அழகூட்டுகிறது. கிளி உருக்கொண்ட சுகர், ஒரு சிவலிங்கத்தை தேரில் வைத்து இழுப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது, தல புராணத்திற்கு வலுவூட்டுகிறதாகும்.
"சௌந்தரவல்லி' என்ற திருநாமத்துடன் அன்னை எழுந்தருளியுள்ளாள். பிற்காலத்தில் முகமண்டபத்திற்குள்ளேயே அமைக்கப்பட்ட சன்னதி இது.

பிரம்ம தேசம்
களத்தூருக்குத் தெற்கே விக்கிசிங்க சதுர்வேதி மங்கலம் என்று முன்பு அழைக்கப்பட்ட பிரம்ம தேசம் உள்ளது. பாலாற்றின் தென்கரையில் உள்ள தலம்.
கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மனான ராசேந்திரனும், அவனது துணைவி வீரமாதேவியும் உயிர் துறந்த இடம் இது. அகத்தீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம் இது.

பனப்பாக்கம்
பனைமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட மற்றொரு திருத்தலமாக விளங்குவது பனப்பாக்கம். வேலூர் - சென்னை நெடுஞ்சாலையில் முக்கியமான சந்திப்பு இது பாலாற்றின் வடகரையில் உள்ளது.
"புலியும் மயிலும் பூசித்த' திருத்தலம் இது என்பதைக் குறிக்க, கருவறை விமானத்தில் ஈசனை பூசித்தபடி புலியும் மயிலும், இருபுறம் பணியும் சுதைச் சிற்பம் அழகூட்டுகிறது. ஐந்து நிலை ராஜகோபுரமும், பிராகாரமும் கொண்டுள்ள அழகிய திருக்கோயில்.
"மயூரநாதர்' என்றே ஈசன் அழைக்கப்படுகிறார். மயூரபுரி, இந்திரபுரி, பிரம்மபுரி, புலியூர், திருத்தாலபுரி, கய்யாணமாவூர் என்று பல பெயர்கள் பனசைப்புராணத்தில் இடம் பெற்றுள்ளன. கல்வெட்டுகள் "புலியப்பர்' என்றே இறைவனை குறிப்பிடுகின்றன.
நந்திதேவர், இந்திரன், அகத்தியர், பிரம்மா ஆகியோர் பூசித்து அருள் பெற்ற தலம். சௌந்தரவல்லி என்ற திருநாமத்துடன் அன்னை தனிச் சன்னதி கொண்டுள்ளாள்.
காஞ்சிபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது பனப்பாக்கம். அரக்கோணம் - திருமால்பூர் வழியே சென்றடையலாம்.

சிறுகரும்பூர்
"சிறுதுரும்பும் பல் குத்த உதவும்' என்பர். இங்கே சிறுகரும்பூரில், சுவை நயம் மிக்க தோர் ஆலயம், தொல்லியல் துறை கண்காணிப்பில் உள்ளது.
முப்புரம் எரித்த முக்கண்ணனே, திரிபுராந்தகராக அருள்பாலிக்கும் திருத்தலம் சிறுகரும்பூர். விஜயநகரத்துச் சிற்பக்கலை மிளிறும் அற்புதச் சிற்பங்கள் கொண்ட திருக்கோயில் கஜாந்தகர், பிட்சாடனர், உமாசகிதர், சந்தியா தாண்டவமூர்த்தி, கங்காதரர், பிரம்மா சிரச்சேத மூர்த்தி, விஷாபஹரணர், கௌரி பிரசாதர், அர்த்தநாரீசுவரர், கிருதார்ஜுனர், ஹரிஹரர், இலங்கேச அனுக்ரகர் என்று பல மூர்த்தங்களைக் கொண்டது.
அது மட்டுமல்ல, பதினொரு ருத்திரர்களையும், அஷ்ட திக்கு பாலகர்களையும், கருட நரசிம்ம யுத்தத்தையும் சிற்ப வடிவில் காணும் பேறு நமக்கு கிடைக்கிறது.
மகேந்திரவர்மன் நிறுவிய தாராலிங்க வடிவில் திரிபுராந்தகர் கொலுவிருக்க, பின் சுவரில் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் அழகூட்டுகிறது. அன்னை "அழகு காமாட்சி'யாக அருள்பாலிக்கிறாள்.
பிரம்மதேசத்திற்கு அருகிலேயே திரிபுராந்தகராக ஈசன் எழுந்தருளியுள்ள சிறுகரும்பூர் உள்ளது. "சரக்கொன்றை' தலவிருட்சமாக விளங்குகிறது.


வேலூர் மாவட்டக் கோயில்கள்-3

ஆம்பூர் குடியாத்தம் துத்திப்பட்டு

வேலூர் மாவட்ட உலாவில் வாணியம்பாடி, திருப்பத்தூர், பெரியபேட்டை, வேலகல்நத்தம், கொரட்டி ஆகிய தலங்களை தரிசித்துவிட்டு நம் பயணத்தைத் தொடர்கிறோம்.
ஆம்பூர்
பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள மற்றொரு திருத்தலம், ஆம்பூர். வாணியம்பாடிக்கு வடக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
பல்லவ அரசன் நிருபதுங்கர்மனின் 36வது ஆட்சியாண்டில் (கி.பி.885), அவனது பிரதிநிதியாக பிருதுவி கங்க அரையன் ஆட்சி செய்தான். அப்போது மூண்ட போரில் பலியானவர்களுக்காக எழுப்பப்பட்ட நடுகற்கள், இந்த ஊரை “ஆமையூர்’’ என்றே கூறுகிறது.
சோழர் காலத்திலும் (15ம் நூற்றாண்டில்) அவ்வூர் “ஆமையூர்’’ என்றே அழைக்கப்பட்டதை சிவாலயத்தின் மேற்குத் திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. அப்போதெல்லாம் பாலாற்றில் கரைபுரண்டு வெள்ளமும், நீர் நிலைகளில் ஆமைகளும் நிரம்பி இருந்தததால் அப்பெயர் வந்திருக்கக்கூடும் என்பர் வரலாற்று ஆய்வர்.
பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த கோயிலை சோழர்கள் திருத்தியமைத்ததோடு “திருநாகீசுவரமுடையார்’ என்ற கல்வெட்டையும் பொறித்து வைத்துள்ளார்.
நாகீசுவரமுடையார், நாகேசுவரராகி, இன்றைக்கு “நாகரத்னசுவாமி’ யாகவும் பெயர் மாற்றம் கொண்டுவிட்டார். நாகதீர்த்தம், திருக்கோயிலினுள்ளே இபுருப்பதும், ஈசனும் நாகத்தையே தனது திருநாமத்தில் கொண்டுவிட்டதாலும், இது சர்ப்பதோஷ பரிகாரத் தலமாகக் கூறப்படுகிறது.
பாம்புப் புற்றொன்றில் முறைத்தெழுந்த திருமேனியானதால் நாகரத்ன சுவாமி என்று அழைக்கப்படுகிறார் போலும். கிழக்கு திசை நோக்கிய அழகிய கோயில், மூன்று நிலை ராஜகோபுரமும் இரண்டு உயர் சுற்றுகளும் கொண்டது. உள் சுற்றில் காளத்திநாதர், வழித்துணை நாதர் சன்னதிகளும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் இடம் பெற்றுள்ளனர்.
நடுநாயகமாக நாகரத்னசுவாமி எழுந்தருளியுள்ளார். கருவறையின் இருபுறமும், மகாமண்டபத்தில் பெரிய துவாரபாலகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
அண்டிவந்தோர்க்கெல்லாம் அபயமளிப்பவளாக, அன்னை “அபயவல்லி’ என்றே திருநாமங் கொண்டுள்ளாள். தனிச் சன்னதியில் நின்றகோலம். நான்கு திருக்கரங்கள் கொண்ட அழகுக் கோலம்.
விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள் சுற்றில் இடங்கொண்டுள்ளனர். பைரவர், நவகிரகங்கள் தனிச் சன்னதியாக உள்ளனர். இவை தவிர, பளிங்குக் கல்லினால் ஆன “ராமகிருஷ்ணர்’ திருமேனிக்கும் தனிச் சன்னதி ஒன்று அமைந்துள்ளது.
ஐப்பசி மாதம் உற்சவம் காணும் நாக ரத்தினசுவாமிக்கு நாள்தோறும் நான்கு கால வழிபாடு நடைபெறுகிறது.


சீனிவாசப் பெருமாள்
ஆம்பூரில் மேலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோயில். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. பலிபீடம், கொடிமரம், சொர்க்க வாசல் ஆகியவை கொண்டது. மகா மண்டபத்தின் முகப்பில் வெங்கடேசப்பெருமானும், வலப்புறம் தாயாரும், இடப்புறம் ஆண்டாளும் அழகிய சுதைச் சிற்பங்களாக உள்ளனர்.
கருவறையில் உள்ள பெருமாள், வாணியம்பாடிப் பெருமாளை விட உயரத்தில் சிறியவராக இருப்பினும், அழகு ஜொலிப்பவர். உற்சவத் திருமேனிகளும் கருவறையில் உள்ளன. தாயார் தனிச் சன்னதி கொண்டுள்ளார். ஆம்பூரில் இவை தவிர காமாட்சியம்மன் திருக்கோயிலும், சாமுண்டீசுவரி திருக்கோயிலும் உள்ளன.

11 அடி உயர் ஆஞ்சநேயர்
11 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர், அதுவும் சனீசுவரரை காலால் மிதித்த கோலத்தில் காணப்படுகிறார். 1489ல், கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்த திருக்கோயில் உருவானதாக வரலாறு கூறுகிறது. அனுமனின் ஒரு கால் பதிந்த இடம் இது என்றும்; மற்றொரு கால் பதிந்த இடம் அருகில் உள்ள ஆனைமடுகு என்றும் கூறுவர். சனீசுவரனின் கர்வத்தை வாயுபுத்ரன் அடக்கியதால், சனியின் பார்வையால் சங்கடத்தில் ஆழ்வோர், ஆம்பூர் திருத்தலத்து ஆஞ்சநேயரை வழிபடலாம்!


துத்திப்பட்டு
ஆம்பூருக்கு வடக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது துத்திப்பட்டு. “பிரதூர்த்தப் பட்டு’ என்று முன்னர் அழைக்கப்பட்டு இப்போது “துத்திப்பட்டு’ ஆகிவிட்டது. “பிரதூர்த்தன்’ யார்? அவனுக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்பு? அதுதான் தலவரலாறு!
ரோமச முனிவர் என்ற ஒரு மகரிஷி, இப்பகுதியில் பர்ணசாலை அமைத்துக் கொண்டு, தனது சீடர்களுடன் தவம் புரிந்து கொண்டிருந்தார்.
அப்போது பிரதூர்த்தன் என்ற அரக்கன், வேள்விகளைக் கலைத்திட அங்கு வந்தான். அதனால் சினம்கொண்ட ரோசமர், அவனைப் புலியாக மாறிட சாபம் கொடுத்தார். புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா? புலியாக மாறிய பிரதூர்த்தன், கானகத்தில் வாழ்கின்ற உயிரினங்களுக்குத் தொல்லை கொடுக்கத் துவங்கினான். கானகம் வாழ் முனிவர்கள் தேவேந்திரனிடம் சென்று முறையிட்டனர்.
முனிவர்களைக் காத்திட தேவேந்திரனும் புலியாக மாறி அரக்கனுடன் சண்டையிட்டான். அரக்கன் பலமே மேலோங்கிய நிலையில் அமரேந்திரன் அவன் மீது வஜ்ராயுதத்தை வீசினான். உயிர் துறக்கும் வேளையில், நல்ல புத்தியும் வந்தது அவனுக்கு. செய்த தவறை உணர்ந்தவனின் குற்றம் பொறுத்தருளுவதுதானே கடவுளின் கருணை! தேவர்களும் திருமாலை வேண்டினர்.
சங்குசக்ர கதாயுதபாணியாக பிரதூர்ததனுக்கும் காட்சி தந்தார் பெருமாள். அரக்கனுக்கு நற்கதி தந்த அதே இடத்தில் நிலை கொண்டு பூவுலகவாசிகளுக்கும் திருவருள் செய்திட வேண்டும் என்று கோரினர் முனிவர்களும் தேவர்களும். அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டு எம்பெருமான் துத்திப்பட்டு தலத்தில் எழுந்தருளியுள்ளார். பிரமாண்ட புராணத்தில் சனத்குமார சம்ஹிதையில் இடம் பெற்றுள்ளது இத்திருத்தல வரலாறு.
பெரிய வெளிச்சுற்றுடன் கூடிய திருக்கோயிலை 45 அடி உயர ஐந்துநிலை ராஜகோபுரம் அழகு செய்கிறது. மூன்று கருவறைகளும், ஒரு முகமண்டபமும், 36 தூண்கள் கொண்ட மகா மண்டபமும் உள்ளன. மூலவர் கருவறை மேல், 18 அடி உயரம் கொண்ட தேஜோ விமானம் அழகு செய்கிறது.

பிந்துமாதவர்
ஆறடி உயரம் கொண்ட பெருமாள். தனது இரு தேவியரும் இருபுறமும் நின்றிட சேவை சாதிக்கிறார். இங்கே அவர் “பிந்துமாதவராயப் பெருமாள்’ என்று திருநாமம் கொண்டுள்ளார். வேணிமாதவர், பிந்துமாதவர் ஆகிய பெருமாளை சேவிக்க பிரயாகை செல்ல வேண்டாம். தமிழ்நாட்டிலேயே க்ஷீரநதி (பாலாறு) தீரத்திலேயே என்னை சேவிக்கலாம் என்று கூறுவது போல, சதுர்புஜங்களுடன், சங்கு சக்கர கதாதரராகக் காட்சி தருகிறார். முத்தங்கி சேவையில் அவரைக் காண கோடிக்கண்கள் வேண்டும்.
உற்சவத் திருமேனிகள் தேவியர் இருவரும் பெருந்தேவி, குமுதவல்லி என்று திருநாமங் கொண்டுள்ளனர்.

பெருந்தேவித் தாயார்
கருவறையை விட்டு வெளியேறி வெளிச் சுற்றுக்கு வந்து, தனிச் சன்னதி கொண்டுள்ள பெருந்தேவித்தாயாரை சேவிக்கிறோம். மறுபுறம் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் சன்னதி. அருகிலுள்ள மகிழமரம் தலமரமாகத் திகழ்கிறது.
நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், உடையவரோடு இத்திருத்தலத்தில் பெருமாள் எழுந்தருளக் காரணமாக இருந்த பிரதூர்த்தனுக்கும் சிலை உள்ளது.
வைகாசி விசாகத்தில் கஜேந்திர மோட்சம் ஐதிகத் திருவிழாவாக நடைபெறுகிறது. சங்கராந்தி அன்று, ரோமச மகரிஷி தவமியற்றி வந்த நிமிஷாசல மலையைச் சுற்றி உற்சவர் வலம் வருவார்.
விஜயநகர மன்னர்கள் பெருமளவில் திருப்பணி செய்துள்ளனர். ஏகஜதேவராயர், விஜயநரசிம்மராயர் திருப்பணிகள் குறிப்பிடத்தக்கவை.
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசித் திருநாள், சொர்க்க வாசல் திறப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குடியாத்தம்
“குடியேற்ற நல்லூர்’ என்று அழைக்கப்பட்ட தலமே இன்று குடியாத்தம் ஆகிவிட்டது. குடியேறுவதற்கு நல்லூரான பகுதியே இன்று “நல்லூர்பேட்டை’ என்று அழைக்கப்படுகிறது. குடியாத்தம், காட்பாடிக்கு மேற்கே 25 கி.மீ. பேரணாம்பட்டு செல்லும் பேருந்துகள், நல்லூர்பேட்டை வழியே செல்கின்றன.
வன்னிமரத்தைத் தலமரமாகக் கொண்டதால், மிகவும் பழமையானதாகவும், அரிய தலவரலாறையும் கொண்டதாகவும் உள்ளது. “கரிப்பொதிக் காவலீசர்’ என்று பெயர் கொண்ட அவர் காலப்போக்கில் கருப்புலீசுவரராக்கப்பட்டுவிட்டார்.
சிவநேசன் என்ற வணிகன், மிளகு மூட்டைகளோடு சென்றபோது அவனது அச்சம் தவிர்த்திட துணையாக வந்து ஈசனின் திருவிளையாடல், தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

வழித்துணை நாயகன்
“நஞ்சுண்டகுடி’ என்ற தொண்டை நாட்டு நகரம். அங்கு வாழ்ந்து வந்தவன் சிவபக்தி மிகுந்த சிவநேசன் என்ற வணிகன். தனம் மிகுந்ததால் “தனபாலன்’ என்று அழைக்கப்பட்டான். நல்வழியில் பொருள் சேர்த்தவன். ஒரு சமயம் தென் திசையிலிருந்து மிளகு மூட்டைகளை வாங்கிக் கொண்டு, கிழக்குக் கரைப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அந்திசாயும் நேரம், அடுத்த ஊரை அடைவதற்குள் இருள் சூழ்ந்திடும். இங்கேயே தங்கிவிடலாம் என்றெண்ணிடும்போது, கட்டிளங்காளையாக ஒரு வீரன் வாளேந்திய வண்ணம் குதிரையொன்றின் மீதேறி வரும் குளம்பொலி கேட்டது. சிவநேசன் திகைத்தான்! இந்நேரத்தில் இங்கே யார்?
நெற்றி முழுதும் திருநீறு அணிந்தபடி வாளைக் கையில் எந்தியபடி வந்த வாலிபன் சிவநேசனுக்கு, வழித்துணை நாயகன் மார்க்க சகாயராகவே காட்சி தந்தான். சிவநேசனை நெருங்கியபடி அவ்வீரன், “உனக்கு நான் துணையாக வருவேன்’ என்று கூறியபடிட இரவு முழுவதும் சிவநேசனுக்குத் துணையாக வந்தான்.
தன் அச்சம் தீர்த்திட வந்தவன் அந்த அரனே என்று கருதி, அடுத்து நெருங்கிடும் விரிஞ்சிபுரத்து வழித்துணை நாதருக்கு லாபத்தில் பாதிப்பங்கும் தந்திட மனத்தில் உறுதி கொண்டான் சிவநேசன்.
இரவு கழித்து வெள்ளி முளைத்தது. உடன்வந்த வீரனைக் காணாது திகைத்தான் சிவநேசன். அந்த வழித்துணைநாதரே தனக்கு துணையாக வந்தது கண்டு மெய்சிலிர்த்தான். தனது வர்த்தகம் முடிந்ததும் வழித்துணைநாதருக்கு தான் எண்ணியபடி காணிக்கையும் செலுத்திவிட்டு, குலம் தழைத்திட மகப்பேறு நல்கிட வேண்டினான்.
சோமவார விரதமிருந்த அவனுக்கு இறைவனருளால் ஒரு மகனும் பிறந்தான். “இனி உனக்கு இத்திருத்தலத்தில் பணி ஏதுமில்லை. பிறந்த நாடு உடனே புறப்படு!’ என்று கனவில் பேரொலி கேட்டது அவனுக்கு!

காட்டில் புலி!
இறைவனின் கட்டளையை ஏற்று சிவநேசன் குடும்பத்தோடு தன் பிறந்த நாடு நோக்கிப் புறப்பட்டான். வழியில் “செருகிரி’ என்ற மலை எதிர்ப்பட்டது. மலையடிவாரத்தில் கூடாரம் அமைத்து அந்த இரவைக் கழித்திட எண்ணினான். கூடாரத்தில் மனைவியையும் மகனையும் விட்டுவிட்டுப் பாறை மீதமர்ந்தபடி சிந்தனையில் ஆழ்ந்தான். அப்போது திடீரென அங்கே யானை ஒன்று பிளிறும் சத்தமும், அதனைத் தொடர்ந்து புலி ஒன்று அதனைத் துரத்தி வருவதையும் கண்டான். அங்கே வந்த புலியோ யானையை விட்டுவிட்டு கூடாரத்தினுள் புகுந்து, சிவநேசனின் குழந்தையைக் கவ்விக் கொண்டு சென்றுவிட்டது.
சிவநேசனும் அவனது மனைவியும் அதுகண்டு மூர்ச்சையாயினர். மயக்கம் தெளிந்த நிலையில் விழித்தபோது, குட்டியானை நின்ற இடத்தில் வேழமுகன் நிற்பதைக் கண்டார். ஆனைமுகத்தான் அவர்கள் முன்தோன்றி, “நீங்கள் பிறவிப்பயன் எய்திவிட்டீர்கள்! அதோ நிருதி மூலையில் உங்கள் குழந்தை பத்திரமாக உள்ளது. செல்க!’ என்று கூறினார்.
எந்தப் புலி அவர்களது குழந்தையை எடுத்துக் சென்றதோ, அது புலி போல் அல்லாது, பூனை தனது குட்டியை எவ்வாறு சிறிதும் காயமுறாமல் கவ்விச் சென்று, குழந்தையைக் கிடத்திவிட்டு, அதனருகில் அமர்ந்திருந்தது. தனது கால்களால் குழந்தையை வருடிக் கொண்டிருந்த வரிப்புலியைக் கண்டான் சிவநேசன்.மெய்சிலிர்த்தான்.
தன்னைத் தடுத்தாட்கொள்ள வேங்கை நாதனாக எழுந்தருளிய தேவனைப் போற்றினான். அம்மையப்பன் ரிஷபாரூடமாக அவர்களுக்குக் காட்சி தந்த அந்தத் திருத்தலமே குடியேற்ற நல்லூராக இன்று திகழ்கிறது.
கரிப்பொதிக்கு காவலாக வந்தவனே, இன்று கருப்புலீசுவரராக அருள்பாலிக்கிறார். அன்னையின் திருநாமம் சிவகாமசுந்தரி. ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுடன் மிளிர, உள்ளே நுழைந்ததும் கொடிமரத்தினடியில், தலவரலாற்றைச் சித்திரிக்கும் சுதைச் சிற்பங்களோடு ஆதிநாதர் எழுந்தருளியுள்ளார்.
வடமொழியில் பாலசாரச்த்துல்லீசர் என்று அழைக்கப்படுகிறார். ஆருத்ரா தரிசனம், பிரம்மோற்சவம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன. நாள் தோறும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.
திருக்கோயிலையொட்டிப் பாயும் ஆறு கண்டலநதி என அழைக்கப்படுகிறது.